Monday, January 26, 2015

திருக்குறள் - ஆமை போல புலன்களை அடக்க வேண்டும்

திருக்குறள் - ஆமை போல புலன்களை அடக்க வேண்டும் 


புலன்கள் நம்மை துன்பத்தில் இழுத்து விட்டு  விடும். புலன்கள் நம்மை தீய வழியில் இட்டுச் செல்லக் கூடும். அப்படி புலன்கள் போன வழியில் போகாமல், அவற்றை கட்டுப் படுத்தி, அவை தவறான பாதையில் செல்ல முயலும்போது அவற்றை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி என்றால், ஆமை எப்படி தனக்குத் துன்பம் வந்த போது புலன்களை உள்ளே இழுத்துக் கொள்கிறதோ அப்படி.

புலன்களை உள்ளே இழுத்துக் கொள்வதன் மூலம் அந்த புலன்கள் மட்டும் அல்ல உடல் பூராவும், உயிரும் ஆபத்தில் இருந்து தப்பிக்கும்.

பாடல்

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி 
னெழுமையு மேமாப் புடைத்து.

சீர் பிரித்த பின்

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றி 
எழுமையும் எமாம்பு உடைத்து 


பொருள்

ஒருமையுள் = ஒன்றனுக்குள் 

ஆமை போல் = ஆமையைப் போல

ஐந்து அடக்கல் ஆற்றி = ஐந்து புலன்களையும் அடக்கினால்

எழுமையும் = ஏழு பிறப்பிற்கும்

எமாம்பு உடைத்து = அரணாக அமையும்

ஒருமையுள் என்றால் என்ன ?


ஆமை அனைத்தையும் (நான்கு கால்களையும், தலையையும் ஆக மொத்தம்  ஐந்து ) தன் ஒரு ஓட்டினுக்குள் இழுத்துக் கொள்ளும். அது ஒரு ஒருமை.

ஆனால் பின்னால் வரும் எழுமைக்கும் என்பதோடு இது சேர மாட்டேன் என்கிறது.

ஒரு பிறவியில் புலன்களை அடக்கினால் அது பின் வரும் ஏழு பிறவிக்கும் நல்லது  செய்யும் என்பது பொருத்தமாக இருக்கிறது.

இரண்டையும் சேர்த்து சிந்தித்தால் இன்னும் சுவை கூடும்.

தனக்கு ஆபத்து வரும்போது ஆமை தன் அவயங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும்.

அது போல புலன்களால் ஆபத்து வரும்போது அவற்றை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பிறவியில் மன மொழி மெய்யை அடக்கினால் அதன் பலன் ஏழு பிறவிக்கு  வரும் என்கிறார்.

முயன்று தான் பார்ப்போமே ?





1 comment:

  1. Nichayamaha. Manathil irutha vendiya karuthu. Revathi.

    ReplyDelete