Thursday, January 29, 2015

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம்

திருமந்திரம் - புலன்களைப் போற்றுவோம் 


பொதுவாக நம் தமிழ் இலக்கியமும் , குறிப்பாக அற நூல்களும் மற்றும் சமய இலக்கியங்களும் புலன்களை அடக்க வேண்டும், புலன்கள் போன வழியில் போகக் கூடாது, புலன்கள் வஞ்சனையை செய்யும், புலன்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் என்றெல்லாம் தான் சொல்கின்றன.

திருமூலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புலன்கள் இல்லாமல் எப்படி எதையும் அறிந்து கொள்வது ? இந்த உடல் முக்கியம், இந்த புலன்கள் முக்கியம் என்று சொல்கிறார்.

புலன்கள் மூலம் தான் அறியமுடியாத இறைவனை அறிய முடியும். எனவே புலன்களை போற்றுங்கள்  என்கிறார்.

உடம்பை  போற்றுகிறார்.

பாடல்


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு

மிக எளிய பாடல். மிக மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டது.

பொருள்


உள்ளம் பெருங்கோயில் = உள்ளம் ஒரு பெரிய கோவில்

 ஊன் உடம்பு ஆலயம் = இந்த மாமிச உடம்பு ஒரு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் = வாய் தான் அந்த கோபுரத்தின் வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் = சந்தேகம் இல்லாமல் தெளிந்த மனம் உடையவர்களுக்கு

சீவன் சிவலிங்கம் = சீவனே சிவன். சிவன் வேறு எங்கும் இல்லை

கள்ளப் புலன் ஐந்தும் = கள்ளமான புலன்கள் ஐந்தும்

காளா மணிவிளக்கு = இருட்டைப் போக்கும் விளக்கு

புலன்கள் கள்ளம் செய்யும் இயல்பு உடையனதான். இருந்தாலும், அறியாமை என்ற இருளைப் போக்கி அறிவு ஒளி பெற உதவுவது இந்த புலன்கள்தான்.

கண் இல்லாமல் எப்படி படிப்பது ?

காது இல்லாமல் எப்படி கேட்டு அறிந்து கொள்வது ?

புலன்கள் இல்லாமல் நம்மால் அறிவைப் பெற முடியாது. 

அறிவைத்தரும் புலன்கள் இந்த உடலோடு சேர்ந்தவை என்பதால், இந்த  உடலும் புனிதமான  கோவிலுக்குச் சமமானது.

உடலுக்குக்குள் இருக்கும்  சீவனை சிவனாக அறிய வேண்டும் என்றால், உடலை முதலில்  கோவிலாக நாம் கருத நடத்த வேண்டும். 

எங்கே செய்கிறோம் ?

 புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது, அளவுக்கு அதிகமாக உணவை அடைப்பது, கண்ட நேரம் தூங்குவது, தூய்மையாக வைத்துக் கொள்வது கிடையாது, அதை  சரியாக பராமரிப்பது கிடையாது. 

பாழடைந்த கோவில் போல வைத்திருக்கிறோம். 

எங்கே இறைவனைக் காண்பது  இதில்.

புலன்களை கூர்மைப் படுத்திக் கொண்டால், நுண்ணிய விஷயங்களை அறிய முடியும். 

இறை என்பது நுணுக்கமான விஷயம். அதை அறிய வேண்டும் என்றால் நம் புலன்கள் கூர்மையாக , மென்மையாக  இருக்க வேண்டும். 

புலன்கள் எப்படி போகத்திற்கு உதவுகிறதோ , அப்படியே யோகத்திற்கும் அது   உதவும் என்கிறார் கம்பரும்.

அதை நாளை பார்ப்போம்....

அதற்கு முன், எப்படி உடலையும், புலன்களையும் போற்றுவது என்று சிந்திப்போம். 


 

7 comments:

  1. arumai. udalthan koil. manamthan deivam.Revathi

    ReplyDelete
  2. காளா மணிவிளக்கே! கே வரணும் தோழர்!

    அன்புடன்
    யோஜென் பால்கி
    Yozenbalki
    www.yozenmind.com

    ReplyDelete
  3. அருமையான சிந்தனை

    ReplyDelete
  4. அடியேனுக்கு மிகவும் பிடித்த திருமந்திரம் நன்றி அன்பரே

    ReplyDelete