Tuesday, January 20, 2015

குறுந்தொகை - அவள் வருவாளா ?

குறுந்தொகை - அவள் வருவாளா ?



வாழ்க்கையின் சிக்கல்களை இலக்கியம் படம் பிடிக்கிறது. நமக்கு ஒரு சிக்கல் வரும் போது , இலக்கியத்தைப் படித்தால், அட இது ஒண்ணும் புதிதல்ல,  இதற்கு முன் எத்தனையோ பேர் இந்த சிக்கலை, இந்த துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்று தோன்றும். வாழ்கையின் மேல் உள்ள வெறுப்பு  குறையும்.

கணவனுக்கு வெளி நாடு செல்ல வேண்டும். சென்றால் நல்ல  சம்பளம். மேலும் பிற்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்புகள் வரும்.

ஆனால், மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல முடியாத சிக்கல். விசா கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

என்ன செய்வது ? பெரிய சிக்கல்.

 அன்பான,அழகான மனைவியை விட்டு பிரியவும்  முடியவில்லை.

அதே  சமயம்,வெளி நாடு செல்லும் வாய்ப்பை உதறவும்  மனமில்லை.

தவிக்கிறான்  கிடந்து.

அவன் தவிப்பை இந்த பாடல் படம் பிடிக்கிறது.

பாடல்

ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்  
கம்மா வரிவையும் வருமோ 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே  

சங்கப் பாடல், கொஞ்சம் சீர்  பிரிப்போம்.

ஈதலும்  துய்த்தலும் இல்லோர்க்கு இல்லென   
செய் வினை கைம்மிக எண்ணுதி  அவ்வினைக்கு   
அம்மா அரிவையும் வருமோ ?
எம்மை உய்த்தியோ உரைத்திசி நெஞ்சே 

பொருள்

ஈதலும் = தானம் தருவதும்

துய்த்தலும் = அனுபவித்தலும்

இல்லோர்க்கு = இல்லை என்று தம்மிடம் வருவோர்க்கு

இல்லென = இல்லை என்று சொல்லாமல் தருவதும்
 
செய் வினை = செயல் செய்ய

கைம்மிக எண்ணுதி = அதைப் பற்றி மிகுதியாக எண்ணுவாய்

அவ்வினைக்கு = அந்த வினைக்கு   

அம்மா  = அம் + மா = அந்த பெரிய, அல்லது சிறந்த

அரிவையும் = பெண்ணும்

வருமோ ? = வருவாளோ

எம்மை உய்த்தியோ = என்னை மட்டும் அனுப்புகிறாயே

உரைத்திசி நெஞ்சே = சொல் என் நெஞ்சே

அவன், தன் நெஞ்சிடம்  சொல்கிறான்.

என்னை மட்டும் போ போ என்று  பிடித்துத் தள்ளுகிறாயே...அவளையும் வரச் சொல்  என்று சொல்கிறான்.

காதல் பாடல்  தான். பிரிவு சோகம் தான். அதிலும் அறத்தைப் பாடுகிறான்   தமிழ்  புலவன்.

பாடலை உற்று நோக்கினால் பாடலின் பின்னே உள்ள அறம் விளங்கும்.


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  


நாமெலாம் , நம் செலவு போக, எதிர் கால தேவை போக மீதியை கொஞ்சம் தானம்  செய்வோம். 

முதலில் நாம் அனுபவிப்போம், பின் தானம் செய்வோம். 

இந்தப் பாடலில் , முதலில், ஈதல் பின் துய்த்தலை பற்றி பேசுகிறான் புலவன். 

தானம் தந்தது போக மீதி உள்ளது நமக்கு என்று வாழ நினைத்த மனம். 

நம்மிடம் ஒரு பிச்சைகாரன் வந்து பிச்சை கேட்டால்,  "ஒண்ணும் இல்லை, அங்க போய்  கேளப்பா " என்று அவனை விட பெரிய பிச்சைகாரனாக நாம் மாறி விடுவோம். 

இங்கே, தலைவன் தன்னிடம் இல்லை என்று வருவோர்க்கு தானும் இல்லை என்று  சொல்லாமல் தர வேண்டுமே என்று நினைத்து பொருள் தேடச் செல்கிறான். 

பொருள் சேர்ப்பது தான் அனுபவிக்க இல்லை. ஈவதற்கும், இல்லை என்று யாசகம்  வேண்டி வருவோருக்கு தருவதற்கும். 

இதற்கு இடையில் மனைவியை விட்டு பிரிய மனம் இல்லை. 

தவிக்கிறான். 

இதுதான் வாழ்க்கை.

சுயநலத்துக்கும் பொது நலத்துக்கும் இடையில் கிடந்து ஊசலாடுகிறது....


No comments:

Post a Comment