Sunday, February 15, 2015

குறுந்தொகை - தச்சன் செய்த தேர்

குறுந்தொகை - தச்சன் செய்த தேர் 


கவிதையின் அழகு அது சொல்வதில் அல்ல...அது சொல்லாமல் விடுவதில்.

தலைவி தலைவனை பிரிந்து இருக்கிறாள். தன் சோகத்தை தோழியிடம் சொல்கிறாள்.

"தச்சன் செய்த சிறு தேரை சிறுவர்கள் கையில் இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி இன்புறுவதைப் போல தலைவனோடு சேர்ந்து இன்பகமாக இல்லாவிட்டாலும் அவனோடு மனிதனால் கொண்ட நட்பால் நான் நன்றாக இருக்கிறேன் (என் வளையல் கழலாமல் இருக்கிறது ") என்கிறாள்.

பாடல்

தச்சன் செய்த சிறுமா வையம்      
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்     
ஈர்த்தின் புறூஉ மிளையோர்     
உற்றின் புேறெ மாயினு நற்றேர்ப் 
பொய்கை யூரன் கேண்மை     
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

சீர் பிரித்த பின் 

தச்சன் செய்த சிறு மாவையம்      
ஊர்ந்து இன்பம் உராராயினும் கையின்     
ஈர்த்து இன்பம் உறும் இளையோர்     
உற்று இன்பம் உறேமாயினும்  நற்றேர்ப் 
பொய்கை ஊரன்  கேண்மை     
செய்து இன்புற்ற என் நெஞ்சு செறிந்தன வளையே. 

பொருள்

தச்சன்  = மர வேலை செய்யும் தச்சன்

செய்த =செய்த

சிறு மாவையம் = சிறிய தேர்
     
ஊர்ந்து = மேல் ஏறி சென்று

இன்பம் உராராயினும் = இன்பம் அடையா விட்டாலும்

கையின் = கையில்
   
ஈர்த்து = இழுத்து

இன்பம் உறும் = இன்பம் அடையும்

இளையோர் = சிறுவர்களைப் போல
   
உற்று இன்பம் = தலைவனை அடைந்து  இன்பம்

உறேமாயினும் = அடையாவிட்டாலும்

 நற்றேர்ப் = நல்ல தேர்

பொய்கை = சிறந்த நீர் நிலைகளைக் கொண்ட

ஊரன் = தலைவன்

கேண்மை = நட்பு
   
செய்து = செய்து

இன்புற்ற என் நெஞ்சு = இன்புற்ற என் நெஞ்சு

செறிந்தன வளையே = கையோடு இருக்கிறது என் வளையல்கள்

பாடல் இது.

கவிதை எது தெரியுமா ?

தேர் என்பது அதில் அமர்ந்து ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுகமாக செல்வதற்கு உருவாக்கப் பட்டது.

ஆனால், சிறுவர்களோ, தேரை கையில் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

காதல் என்பது, தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் கூடி இன்பம் அனுபவிக்க  ஏற்பட்டது. ஆனால், இவளோ பழைய நட்பை நினைத்து வாழ்கிறாள். பொம்மை தேரைப் போல.


மேலும், சிறுவர்கள் தேரை இழுத்துக் கொண்டு திரிவார்கள். ஒரு காலம் வரை. அதற்குப் பிறகு பொம்மை தேரை தூக்கி போட்டு விட்டு உண்மையான தேரை செலுத்த தொடங்கி விடுவார்கள். பெரிய ஆளான பின்னும் பொம்மை தேரை இழுத்துக் கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும் ?

காதல் கண்ணில் தொடங்கும், அப்பப்ப ஒரு சிறு புன் முறுவல், முடிந்தால் ஒரு சில கடிதங்கள், பின் நேரில் தனிமையில் சந்திப்பு, கொஞ்சம் விரல் பேசும், வியர்வை நீர் வார்க்க, வெட்கம் பூ பூக்கும்...இப்படியாக காதல் வளரும். வாழ் நாள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ? (next step கு போடா ).

அது போல, இன்னும் அவன் மேல் கொண்ட நட்பை எண்ணி வாழ்கிறேன் என்கிறாள். காதல் வளரவில்லை. தேரை இழுத்துக் கொண்டு அலைகிறாள்.


சிறுவர்கள் சிறிய தேரை இழுத்துக் கொண்டு அலைகிறார்கள். அவன் பெரிய தேரில் செல்கிறான் என்று இரண்டையும் சேர்த்தும் படிக்கலாம் நாம். 

தலைவன் ஏன் பிரிந்தான் ?  கவிஞர் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பரத்தையிரடம் போய் இருக்கலாம்.

எப்படி தெரியும் ?

பாடல் சொல்கிறது, அவன் பெரிய பணக்காரன் என்று. அவனிடம் தேர் இருக்கிறது, நீர் நிலைகள்  நிறைந்த ஊருக்குத் தலைவன். பெரிய ஆள் தான். தலைவியை மறந்து விட்டான்.

இன்னும் சொல்லப் போனால், கவிதை , தலைவன் மறந்து விட்டான் என்று கூடச் சொல்ல வில்லை.

அவன் நட்பை நான் மறக்க மாட்டேன் என்கிறாள். எனவே அவன் மறந்து விட்டான் என்று நாம் அறியலாம்.


 



1 comment:

  1. என்ன நுணுக்கமான பாடல்! மிக நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete