Saturday, March 14, 2015

இராமாயணம் - போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது

இராமாயணம் - போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது 


சில பேர் எதுக்கு எடுத்தாலும் வாதம் பண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

எதைச் சொன்னாலும் அது எப்படி, ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று வாதம் பண்ணுவார்கள்.

மேலும்  சிலர்  விவாதம் என்று வந்து விட்டால், எப்படியும் அந்த விவாதத்தில் வென்றே ஆக வேண்டும் கழுத்து நரம்பு எல்லாம் புடைக்க விவாதம் செய்வார்கள்.

வாதத்தில் வெற்றி பெறுவார்கள், ஆனால் யாருடன் விவாதம் பண்ணுகிறார்களோ அவர்களின் அன்பை, நட்பை, உறவை இழப்பார்கள்.

சண்டை போடாமல் வெற்றி கிடையாது என்று . நம்புகிறார்கள்.  நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் வேறு யாரவது ஒருவர் தோற்கத் தானே வேண்டும்.

வெற்றி பெறாமல் எப்படி புகழ் வரும் ?

எனவே சண்டை போட்டுக் கொண்டே இருப்போம் என்று பலர் நினைக்கலாம்.

அப்படி அல்ல என்கிறார் வசிட்டர்


யாரோடும் பகை இல்லை என்ற பின், போர் இல்லாமல் போகும். போர் இல்லை என்றால் படை வீரர்கள் சாக மாட்டார்கள். படையின் அளவு குறையவில்லை என்றால் படை பலம் பெருகும். படை பலம் பெருகினால் எதிரிகள் அஞ்சி போர் செய்ய வர மாட்டார்கள். அது மேலும் போர் வருவதை தடுக்கும்.

யாரும் சண்டைக்கு வர அஞ்சி, போர் செய்யாமல் இருந்தால், முழு நேரத்தையும்  நாட்டின் நிர்வாகத்தில் செலவிடலாம். அதனால் நல்ல பெயரும் புகழும்  கிடைக்கும்.

போர் ஒடுங்கும். புகழ் ஒடுங்காது.

பாடல்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? ‘

பொருள்

‘யாரொடும் = யாரோடும்

பகை கொள்ளலன்  என்ற பின் = பகை கொள்ளாமல் இருந்தால்

போர் ஒடுங்கும் = போர் என்பது இருக்காது

புகழ் ஒடுங்காது; = ஆனால் புகழ் ஒடுங்காது

தன் = தன்னுடைய

தார் ஒடுங்கல் செல்லாது; = மாலை கெடாது. அதாவது ஆட்சி ஒழுங்காகச் செல்லும்.

அது தந்தபின் = அது நிகழ்ந்த பின்

வேரொடும் = வேரோடு

கெடல் வேண்டல் உண்டாகுமோ?  = கெட வேண்டியது இருக்காது

போரை விட அமைதி முக்கியம்.

பகையை விட நட்பு முக்கியம்.



No comments:

Post a Comment