Tuesday, March 24, 2015

ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள்

ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள் 


மேஜை நாகரிகம் (Table Manners அல்லது table etiquette ) என்பது என்னவோ மேற்கிந்திய நாடுகளில் உள்ள ஒன்று. அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள  வேண்டும் என்று இன்றைய இளைய தலை முறை நினைக்கலாம்.

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உடன் இருந்து உண்பதின் வழி முறைகளை, நாகரிகத்தை சொன்னது நம் தமிழ் பண்பாடு.

நாம் சாப்பிடும்போது நம் கூட பெரியவர்கள் யாராவது சேர்ந்து உண்டால், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பின்னரே நாம் உண்ணத் தொடங்க வேண்டும். அவர்கள் சாப்பிட்டு எழுந்த பின் தான் நாம் எழ வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், திருமணம் மற்றும் சடங்கு  வீடுகளில் நீ முந்தி நான் முந்தி பந்திக்கு முந்துகிறார்கள். யார் முதல் பந்தியில் இருப்பது என்பதில் போட்டி.

பெரியவர்கள் போட்டி போட்டிக் கொண்டு செல்ல முடியாது. அவர்கள் பின் தங்கி விடுகிறார்கள். அவர்கள் பசியோடு இருப்பார்கள்.

இவை எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

முதலில் வயதில் பெரியவர்களை பந்தியில்  அமரச் செய்து பின் இடம் இருந்தால் மற்றவர்களை அமரச் செய்யலாம்.

இரண்டாவது, விருந்து என்று வந்து விட்டால், சற்று அளவு இல்லாமல் உண்பது என்பது நடக்கிறது. ஒரு நாளைக்குத் தானே, தினமுமா இப்படி ஒரு விருந்து கிடைக்கிறது என்று கண் மண் தெரியாமல் உண்டு உடலை பெருக்க வைக்க வேண்டியது, பின் அல்லல் பட வேண்டியது.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. உண்பதில் நாகரீகம் வேண்டும். 

பாடல்

முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண்
என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

சீர் பிரித்த பின்

முன் துவ்வார் , முன் எழார் மிக்கு உறார் ஊணின் கண் 
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மிற் 
பெரியார் தம் பாலிருந்தக் கால் 

பொருள்

முன் துவ்வார் = (பெரியவர்களுக்கு) முன் உண்ண ஆரம்பிக்க மாட்டார்கள்

முன் எழார் = அவர்கள் எழுவதற்கு முன் எழ மாட்டார்கள்

மிக்கு உறார் = அவர்களுக்கு மிக அருகில் போய் அமர மாட்டார்கள்

ஊணின் கண் = உணவு உண்ணும் இடத்தில் (பந்தியில் )

என் பெறினும் = என்னதான் கிடைத்தாலும்

ஆற்ற வலம் இரார் = வலப் புறம் இருக்க மாட்டார்கள்

தம்மிற் = தம்மை விட

பெரியார் தம் = பெரியவர்கள்

பாலிருந்தக் கால் = உடன் இருக்கும் பொழுது


சொல்லித் தருவோம் மற்றவர்களுக்கும். கொஞ்ச கொஞ்சமாக நாம் நல்லவற்றைப்  பரப்புவோம். நல்லது வளர்கிறதோ இல்லையோ, தீயவை வளராமலாவது  இருக்கும். 


2 comments:

  1. Now a days my first thing in the morning is to check any new post from your blog

    Though I did some of this by hereditary or by force, now knowing the values of culture.

    May God give all good things to you and pls continue your great work.

    ReplyDelete
  2. வலப்புறம் அமர்ந்தால் என்ன தவறு?

    ReplyDelete