Thursday, March 26, 2015

ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது

ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது 


சாப்பிட்டு முடிந்த பின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்பதற்கு ஒரு பாடல். 

இதில் என்ன இருக்கிறது, தண்ணிய வாயில் ஊத்த வேண்டும், கொப்பளிக்க வேண்டும்...இதில் என்னய்யா பெரிய வழி முறை என்று கேட்கிறீர்களா...

Finger Bowl ல், மேஜையில் அமர்ந்து கை கழுவி, வாய் கொப்பளிக்காமல் இருக்க அல்லவா நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்திருக்கிறோம். 

உணவு உட்கொண்டபின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை...

வாயில் ஊற்றிய தண்ணீர் உடலுக்கு உள்ளே போகக் கூடாது. 

தொண்டை வரை நீர் சென்று சுத்தம் செய்ய வேண்டும்

மூன்று முறை நீர் கொப்பளிக்க வேண்டும் 

நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதுவும் எப்படி என்றால் கண், காது , மற்றும் மூக்கு போன்ற அவயங்களை அழுத்தி கழுவ வேண்டும்.


பாடல் 

இழியாமை நன்குமிழ்ந் தெச்சி லறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

சீர் பிரித்த பின் 

இழியாமை நன்கு உமிழ்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்து உறுப்பு 
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

பொருள் 

இழியாமை = இழிதல் என்றால் இறங்குதல். வாயில் விட்ட நீர் உடலுக்கு உள்ளே இறங்கக் கூடாது 

நன்கு உமிழ்து = நல்லா துப்பி 

எச்சில் அறவாய் = வாயில் எச்சில் இல்லாமல் துப்பி 

அடியோடு நன்கு துடைத்து = அடி நாக்கு வரை நன்கு துடைத்து (நீரால் கொப்பளித்து)

வடிவு உடைத்தா = அளவோடு 

முக்காற் = மூன்று முறை 

குடித்துத் துடைத்து = நீரை உண்டு வாய் கழுவி 
 
முகத்து உறுப்பு = முகத்தில் உள்ள உறுப்புகள் (கண், காது , மூக்கு போன்றவை) 
 
ஒத்த வகையால் = அதற்கு பொருந்தும் வகையில் 

விரல் உறுத்தி = விரலால் அழுத்தி 

வாய் பூசல் = வாய் கழுவுதல் 

மிக்கவர் கண்ட நெறி = பெரியவர்கள் கண்ட வழி 

செய்து  பார்ப்போம்.  அப்படி ஒன்றும் பெரிய வேலையாகத் தெரியவில்லை. 

நல்லதை முயன்று பார்த்தால் என்ன ?





No comments:

Post a Comment