Sunday, March 29, 2015

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது 


இன்று பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்கின்றன. இதற்கு யார் காரணம் என்று சர்ச்சைகள் எழுகின்ற போது , பெண்களும் காரணம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.  பெண்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றக் கூடாது, என்றெலாம் சொல்கிறார்கள்.

அந்த விவாதங்கள் ஒரு புறம்  இருக்கட்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட ஆசாரக் கோவை ஆணிடம் சொல்கிறது...ஒரு பெண்ணோடு தனித்து இருக்காதே என்று. அதுவும் எந்தெந்த பெண்களோடு தெரியுமா ...சொன்னால் நம்மால் அதை ஜீரணிக்கக் கூட முடியாது..

பெற்ற தாய்,  மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு கூட தனித்து இருக்காதே...ஏன் என்றால் ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்கிறது.

இவர்களோடு தனித்து இருக்காதே என்று சொன்னது ஆணுக்குத்தான் என்றாலும், ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்று சொன்னது இருவருக்கும்  பொருந்தும்.

புலன்கள் கட்டவிழ்த்து கொண்டால் அது தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பார்க்காது. கணவனுக்கும் தகப்பனுக்கும் வேற்றுமை தெரியாது.

சிந்தக்க கொஞ்சம் விரசமாகத்தான் இருக்கும். இருந்தும், புலன்களின் வேகத்தை  அறிந்து, எதற்கு வம்பு, தனியாக இருக்காதே என்று அறிவுறுத்துகிறது  ஆசாரக் கோவை.

இன்றும் கூட பல வீடுகளில் வயதுக்கு வந்த அண்ணன் தங்கை, அக்கா தம்பி இவர்களை தனியே விட்டு விட்டு பெற்றோர் செல்ல மாட்டார்கள். வயதின் தாக்கம், இளமையின் வேகம், வரம்பு மீறச் செய்யலாம் என்ற பயம்.

 தாய், மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு தனித்து இருக்கக் கூடாது என்றால் முன் பின் அறியாத வேறு எந்த பெண்ணுடன்   தனித்து இருக்கலாமா ?  கூடாது.

அறிவுக்குத் தெரியும் இது தாய், மகள், தமக்கை என்று. புலன்களுக்குத் தெரியாது.

அலுவலகம் ஆனாலும் சரி, மற்ற இடமானாலும் சரி, வேற்று ஒரு பெண்ணோடு தனித்து இருப்பதை தவிர்ப்பது நலம்.

குரான் சொல்கிறது , மனைவி இல்லாத மாற்று பெண்ணோடு தனித்து இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் சாத்தான் அமர்ந்து இருப்பான் என்று.

பாடல்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந்
தாங்கற் கரிதாக லான்.

பொருள்

ஈன்றாள் = தாய்

மகள் = மகள்

தம் உடன்பிறந்தாள் = உடன் பிறந்த அக்கா தங்கை

ஆயினும் = ஆனாலும்

சான்றார் = பெரியவர்கள், படித்தவர்கள், நல்லவர்கள்

தமித்தா உறையற்க = தனித்து இருக்கக் கூடாது

ஐம்புலனுந் = ஐந்து புலன்களும்

தாங்கற் கரிதாக லான் = கட்டுப் படுத்துவதற்கு கடினமானவை என்பதால்

மற்ற பெண்களோடு தனித்து இருப்பதை தவிருங்கள்

அந்த மாதிரி சந்தர்பங்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தராதீர்கள்


இந்த மாதிரி பாடல்களை பள்ளியில் , இளமைக் காலத்தில் சொல்லித் தந்து விட்டால், பின்னர் அது தானாகவே வந்து விடும். பின்னாளில், ஆணும் பெண்ணும் தனித்து இருக்கும் சந்தர்பங்களில்  இது சரியில்லை என்ற எண்ணம்  அவர்களுக்கு தானாகவே வந்து விடும். 

தவறு செய்ய சந்தர்ப்பம் வராது.

நாம் சொல்லித் தருவது இல்லை.

சிக்கல்களை சந்திக்கிறோம்.  

1 comment:

  1. I fully agree with you. Sarada devi has said this. Don't believe your own father and brother. Even my mother always used to stay with us. But I have a doubt. "Arivukku therivathu pulangalukku theriyatha"?

    ReplyDelete