Wednesday, March 11, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ 


அரும்பாடு பட்டு செல்வம் சேர்க்கிறோம்.

சேர்த்த எல்லாவற்றையும் நம்மால் அனுபவிக்க முடிகிறதா ? நாம் இறக்கும் போது எல்லாவற்றையும் செலவழித்து விட்டா போகிறோம் ? இந்த வீடு எங்கே இருக்கிறது, அதை நீ எடுத்துக் கொள், அந்த பெட்டகத்தில் உள்ள நகைகளை நீ எடுத்துக் கொள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் கொடுத்து விட்டு வெறுங் கையோடு செல்கிறோம்.

சரி, அதற்காக செல்வமே சேர்க்காமல் இருந்தால் சரி வருமா ? அப்படியே கொடுத்தாலும் யாருக்கு கொடுக்கிறோம் ... பெண்டாட்டி பிள்ளைகளுக்குத் தானே கொடுக்கிறோம்...அதில் என்ன தவறு.

தவறு செல்வம் சேர்பதில் அல்ல...

செல்வம் சேர்க்கும் முனைப்பில் உண்மை எது, வாழ்கை என்றால் என்ன, இதன் நோக்கம் என்ன, என்று  தன்னை அறியாமல் செக்கு மாடு போல சுத்தி சுத்தி வருவதுதான்....

செல்வம்  சேர்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா ?

கடைசி நேரத்தில் "அடடா வாழ் நாள் எல்லாம் வீணாக்கி விட்டோமே" என்று வருந்தி சாகக் கூடாது.

தேனீக்கள் அரும்பாடு பட்டு ஆயிரக்கணக்கான பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும். அது சேர்த்து வைத்த பின், அதனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாது. வலிமையான மனிதர்கள் வந்து அந்த தேனை கொண்டு செல்வார்கள்.

பாடல்

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்1
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள்


ஈட்டிய = சேர்த்த

தேன் = தேன்

பூ மணங்கண் = பூவின் மணமும்

 இரதமும் கூட்டிக் = தன் உமிழ் நீரையும் சேர்த்து  


கொணர்ந்தொரு = கொண்டு வந்து ஒரு

கொம்பிடை வைத்திடும் = மரக் கிளையில் வைத்திடும்

ஒட்டித்  துரந்திட் டது = பல விதங்களில் அந்த தேனீக்களை துரத்தி விட்டு

வலி யார்கொளக் = வலிமையானவர்கள் கொள்ள

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே = காட்டி கொடுத்து அது கை விட்டவாறே

இயற்கை பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.

விழித்துக் கொண்டால்  படிக்கலாம்.



2 comments:

  1. //இயற்கை பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.

    விழித்துக் கொண்டால்  படிக்கலாம்//

    Good

    He could have compared with anything else but bees...good analogy

    We fly like bees to save and secure wealth

    ReplyDelete
    Replies
    1. Nothing else saves food for future as bees do. Also, bees not only just gathers like ants , it also puts its own saliva to make the honey.

      Delete