Saturday, March 28, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எப்படி மறப்பேன் ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எப்படி மறப்பேன் ?


காதல் வயப் பட்டவர்களுக்கு அவர்களின் காதலனையோ காதலியையோ ஒரு நிமிடம் கூட மறக்க முடியாது. எப்போதும் அவர்கள் சிந்தனையாகவே இருப்பார்கள். உண்ணும் போதும், உறங்கும் போதும் அவர்கள் நினைவே வந்து வந்து போகும். வேறு ஒன்றிலும் ஆர்வம் இருக்காது. மீண்டும் எப்போது அவர்களைப் பார்ப்போம் என்று தவித்துக் கொண்டு  இருப்பார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்...


ஸ்ரீரங்கம் போய் இருக்கிறீர்களா ?

அகண்ட காவேரி ஆறு. மழைக் காலத்தில் இன்றும் நீர் இரு கரையும் தொட்டுப் போகும். பொங்கி பொங்கி வரும் நீர். அந்த ஆற்றின் நடுவில் உள்ள தீவு ஸ்ரீரங்கம். ஊரெல்லாம் சோலை. இன்று அந்த சோலை எல்லாம் மாறி வீடுகள்  வந்து விட்டன. ஊரின் நடுவில் கோவில்.கோவிலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள். பெருமாளை காண்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். மனம் அப்படியே இலயித்துப்  போகிறார்.

அந்த உருவமே மீண்டும் மீண்டும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. வேறு ஒன்றிலும் மனம் போக மறுக்கிறது. வேறு எதிலும் ஆர்வம் இல்லை. பணம், பொருள், சொத்து , சுகம் என்று எதிலும் பற்று இல்லை. ஒன்றும் இல்லாத ஏழையேனே என்று தன்னைத் தானே  குறிப்பிடுகிறார்.


பாடல்  

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

சீர் பிரித்த பின்

கங்கயில்  புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தன்னுள் 
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே 

பொருள்

கங்கயில் = கங்கையை விட

புனிதமாய = புனிதமான

காவிரி நடுவு பாட்டு = காவிரிக்கு நடுவில்

பொங்கு நீர் = பொங்கி வரும் நீர்

பரந்து பாயும் = பரந்து விரிந்து அனைத்து இடங்களிலும் பாயும்

பூம்பொழில் = பூக்கள் நிறைந்த சோலைகளில் உள்ள 

அரங்கத்தன்னுள் = திருவரங்கத்தில்

எங்கள் மால் = எங்கள் திருமால்

இறைவன் = இறைவன்

ஈசன் = ஈசன்

கிடந்ததோர் = படுத்து இருக்கும்

கிடக்கை கண்டும் = கோலத்தைக் கண்ட பின்

எங்ஙனம் மறந்து வாழ்கேன் = அந்தக் கோலத்தை எப்படி மறந்து வாழ்வேன்

ஏழையேன் ஏழையேனே = ஏழையேன் ஏழையேனே

இறை சிந்தனை என்பது எப்போதும் இருக்க வேண்டும்.

துன்பம் வரும்போது நினைப்பது, நாள் கிழமை வந்தால் நினைப்பது, காலை மாலை பூஜை நேரத்தில் நினைப்பது என்று நமக்கு வேண்டிய அல்லது சரிப்பட்ட நேரத்தில் நினைப்பது அல்ல.

மாணிக்க வாசகர் சொல்லுவார் "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். 



1 comment:

  1. River kaveri is the pride of Tamil nadu.It may be mainly due to arangan. But it is not possible to recite his verses or his name all the time. Can we say work is worship?@

    ReplyDelete