Friday, March 6, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம் 


ஏன் குப்பை மூட்டையை தூக்கித் திரிகிரீர் என்று பாரதி, குள்ளச் சாமியை பார்த்து கேட்டான்.

அதற்கு, அந்த குள்ளச் சாமி, நானாவது வெளியே குப்பை மூட்டையை தூக்கித் திரிகிறேன். நீயோ, மனதுக்குள் எத்தனை குப்பை மூட்டைகளை தூக்கிக் கொண்டு திரிகிறாய் என்று திருப்பிக் கேட்டார்.

கேட்டது பாரதியிடம் அல்ல...நம்மிடம்.

மேலும் பாரதி சொல்லுகிறார்....

முட்டாள்களே, சென்றது இனி மீண்டு வராது. நீங்கள் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து வருந்துகிறீர்கள். சென்றதைப் பற்றி மறந்து விடுங்கள்.

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் உறுதியாக கொண்டு, தின்று, விளையாடி இன்பமாக  வாழ்வீர்.

பாடல்

சென்றதினி மீளாது; மூடரே நீர்
எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;


பொருள்

படிக்காமல் விட்ட பாடங்கள், வாங்காமல் விட்ட சொத்துகள், செய்த தவறுகள்,  பட்ட அவமானங்கள், அனுபவித்த துன்பங்கள், என்றோ எப்போதோ நடந்துவிட்ட தவறுகள்  என்று பழசை நினைத்தே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்.

இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள்  என்று அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்

சொல்லிக் கொடுத்தவை, படித்தவை, நாமாக நமக்குச் சொல்லிக் கொண்ட அனுபவப் பாடங்கள் நமக்கும் உண்மைக்கும் நடுவே நிற்கின்றன.


நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது.

இறந்த காலத்தை முற்றுமாக மறந்து விடுங்கள். இன்று புதியதாய் பிறந்தோம்  என்று எண்ணிக்  கொள்ளுங்கள்.

வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என்று எண்ணி ஆரம்பியுங்கள்....ஒவ்வொரு நாளும்.

பழைய குப்பைகளை தூக்கிப்  போடுங்கள்.

பிறந்த குழந்தைக்கு எதிர் காலம் மட்டும் தான் உண்டு....அதற்கு இறந்த காலம் என்பது இல்லை.

குழந்தைக்கு எல்லாமே புதிது....இந்த உலகமே புதிது....மனிதர்கள், உறவுகள், பொருள்கள, சப்தங்கள், காட்சிகள் என்று எல்லாமே புதிது....

அது போல, புத்துணர்வு கொண்டு உண்டு, விளையாடி, இன்பமாக இருங்கள்.

இதை விட உயர்ந்த  உபதேசம் கிடைத்து விடுமா என்ன ?

 


1 comment:

  1. எளிய கருத்துக்கு இனிமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete