Thursday, March 26, 2015

ஆசாரக் கோவை - தூங்கும் முறை

ஆசாரக் கோவை - தூங்கும் முறை 


படுக்கப் போகும் முன் எதை நினைத்துக் கொண்டு படுக்கிறோமோ  அதுவே கனவில் வரும்....

இறைவனை கனவிலும் காண வேண்டும்.

ஆண்டாள் அப்படி கண்டாள் ...திருமாலை "கனா கண்டேன் தோழி நான்" என்று பாடினாள். அவனையே நினைத்துக் கொண்டு இருந்தாள், கனவிலும் அவன் வந்தான்.

இன்றோ, பெரியவர்களும் சிறியவர்களும் படுக்கப் போகு முன் தொலைக் காட்சியில் வரும் நிகழ்சிகளைப் பார்க்கிறார்கள். சினிமா, செய்தி என்று பார்த்து விட்டு படுத்தால் அது தான் கனவில் வரும்.

ஆசாரக் கோவை சொல்கிறது,

படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல்மேல் போர்த்தி உறங்குவது நல்லது என்று.

பாடல்


கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

பொருள்

கிடக்குங்காற் = படுக்கும் போது

கைகூப்பித் = கைகளை கூப்பி

தெய்வந் தொழுது = தெய்வத்தை தொழுது

வடக்கொடு = வட திசை மற்றும்

கோணந் = கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு)

தலைசெய்யார் = தலை வைக்காமல்

மீக்கோள் = போர்வை

உடற்கொடுத்துச் = உடலுக்குக் கொடுத்து

சேர்தல் வழி = தூங்குதல் நல்ல வழி

ஒரு நாள் செய்து பாருங்கள். நல்லா இருந்தால் பின் பற்றுங்கள்.


3 comments:

  1. இந்த "ஆசாரக் கோவை" என்ழுதியது யார்?!

    "சும்மா எடுத்ததுக்கு எல்லாம் அறியுரை சொல்லுது பெருசு" என்று சொல்வது போல இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர்.

      பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

      Delete
  2. பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை
    கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று

    ReplyDelete