Sunday, March 8, 2015

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - எல்லாம் செய்வது எதனால் ?

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - எல்லாம் செய்வது எதனால் ?


நாம் பல வேலைகள்  செய்கிறோம்.

படிக்கிறோம், தொழில் செய்கிறோம், அலுவகலத்தில் வேலை செய்கிறோம்..இது எல்லாம் எப்படி செய்கிறோம் ?

நம் திறமையாலா ? நம் அறிவாலா ? நம் முயற்சியாலா ?

இல்லை.

 நம்மை விடுங்கள்....

பிரம்மாவும், திருமாலும், சிவனும் எப்படி அவர்களது படைத்தல், காத்தல் , அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்கிறார்கள் ?

அவர்களின் ஆற்றலால் அல்ல....

அறம் , செம்மையான மனம், மற்றும் அருள் - இந்த மூன்றினால் தான் அப்பேற்பட்ட மும்மூர்த்திகளும் தொழில் செய்ய முடிகிறது...

எனவே இராமா, நீ பெரிய சக்ரவர்த்தி ஆகிவிட்டால் என்ன வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும்  செய்து விடலாம் என்று நினைத்து விடாதே....

அறத்திற்கு புறம்பாக ஒன்றும் செய்ய முடியாது
மனதிற்கு வஞ்சனை செய்து ஒன்றும் செய்து விட முடியாது
அருள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

பாடல்

உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,
அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?



பொருள்

உருளும்  = சுற்றும்

நேமியும் = சக்கரமும்

ஒண் கவர் = (மூன்றாகப் ) பிரிந்த , கிளைத்த

எஃகமும் = திரி சூலமும்

மருள் இல் வாணியும் = மயக்கம் இல்லாத வாணியும் (சரஸ்வதி)

வல்லவர் =  இவற்றைக் கொண்ட

மூவர்க்கும் = மூன்று பேருக்கும் (திருமால், சிவன், பிரம்மா)

தெருளும் = தெளிந்த

நல் அறமும் =  நல்ல அறமும்

மனச் செம்மையும் = செம்மையான மனமும் (பொய் இல்லாத, வஞ்சனை இல்லாத, பொறாமை இல்லாத ...)

அருளும் = அருளும்

நீத்தபின் ஆவது உண்டாகுமோ? = விட்டு விட்டால் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது.

 அறம் , குற்றமற்ற மனம், அருள் - இந்த மூன்றும்தான் மிகப் பெரிய காரியங்களை  செய்ய உதவும்.

அறிவோ, பணமோ, செல்வாக்கோ, படை பலமோ, அதிகார பலமோ துணை நிற்காது.

எல்லாம் இருந்தும் இராவணன் அழிந்தான் - அறம் இல்லாத வழியில் சென்றதனால்.

அதிகாரம் வரும்போது அருள் போய் விடுகிறது. நல்லது செய்ய வேண்டும் என்று பதவிக்கு  வருபவர்கள் சுயநலத்தில் இறங்கி விடுகிறார்கள். ஏழைகள் மேல்  அருள் போய் விடுகிறது.

மனதில் வஞ்சம் , துவேஷம் வந்து வந்து விடுகிறது.

இதை மனதில் கொள் என்று இராமனுக்கு உபதேசிக்கிறார் வசிட்டர்.



1 comment:

  1. என்ன அருமையான பாடல்!

    இதில் அருள் என்றால் என்ன என்று யோசித்தேன். "பிறரை எண்ணுவது அருள்" என்று கொள்ளலாமா?

    ReplyDelete