Sunday, March 22, 2015

ஆசாரக் கோவை - உண்ணும் முறை

ஆசாரக் கோவை - உண்ணும் முறை 


நமக்கு கிடைத்த மாதிரி முன்னோர்கள் யாருக்குக் கிடைப்பார்கள் ?

எப்படி உணவு உண்ண  வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள் நம் முன்னவர்கள்.

உணவினால் இன்று எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது...

அதிகமாக உண்டு அளவுக்கு அதிகமாக எடை போட்டு அவதிப் படுகிறோம், சர்க்கரை அதிகம் உண்டு சக்கரை நோயால் துன்பப் படுகிறோம், கொழுப்பு கூடி கொலஸ்ட்ரால் வந்து சங்கடப் படுகிறோம், acidity , நெஞ்சு எரிச்சல் என்று எத்தனையோ சிக்கல்கள்....

ஏன் என்றால் எதை உண்பது, எப்படி உண்பது என்று தெரியாததனால்.

எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஆசாரக் கோவை நமக்கு சொல்லிழ்த் தருகிறது.

இன்று பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் உணவு உண்ணும் போது தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டோ அல்லது  ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டோ , கணனியில் மெயில் அல்லது ஏதோ ஒரு வெப் சைட்டை பார்த்துக் கொண்டோ உணவு உண்கிறார்கள். கிரிகெட் மேட்ச் என்றால் அதை பார்த்துக் கொண்டே உண்கிறார்கள். பெரிய பெரிய உணவு விடுதிகளில் பெரிய தொலைக் காட்சி பெட்டி வைத்து அதில் ஏதோ செய்தி ஓடிக் கொண்டிருக்கும், அதைப் பார்த்துக் கொண்டே உணவு உண்கிறார்கள்.

அதே போல, உணவு உண்ணும்போது, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் மதிப்பெண், போன்றவற்றை விவாதம் செய்வது...

அல்லது, வேறு குடும்ப விவகாரங்களை பேசுவது, செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி  பேசுவது என்று  போகிறது.

வேறு சில குடும்பங்களில் பிரச்சனைகளை பேசுவதே சாப்பாட்டு மேஜையில் தான்.

இது அனைத்துமே தவறு என்கிறது ஆசாரக் கோவை.

உணவு உண்ணும் போது வேறு எதையும் பார்க்கக் கூடாது. உணவை மட்டுமே பார்த்து உண்ண வேண்டும்.

நாளை முதல் சாப்பிடும் போது டிவி யை அணைத்து விடுங்கள். புத்தகமோ, புத்தகமோ இருக்கக் கூடாது.

படித்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது.

எதையும் பேசக் கூடாது. நல்லதும் சரி, கெட்டதும் சரி, ஒன்றையும் பேசக் கூடாது.

குறிப்பாக பெண்கள் வீட்டுப் பிரச்சனைகளை சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பது நல்லது.

உணவை தொழுது உண்ண வேண்டும். உணவு உயிர் தரும் பொருள். உயிர் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு உயர்ந்தது உணவு.

மடியில் ஒரு டப்பாவில் பாப் கார்ன் அல்லது பஜ்ஜி அல்லது பிஸ்கட் என்று எதையோ வைத்துக் கொண்டு டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டோ, சினிமா பார்த்துக் கொண்டோ உண்பது கூடாது.

உணவுக்கு மரியாதை தர வேண்டும்.

தெய்வம் போல நினைத்து தொழுது உண்ண வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை.


இப்போது துரித உணவு விடுதிகள் (fast food ) வந்து விட்டன. நின்று கொண்டே சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள். கூடாது. அமர்ந்து தான் உண்ண வேண்டும்.

மேற்கிந்திய காலாசாரம் வந்த பின், bed  காபி என்று வந்து விட்டது. பல் விளக்காமல், படுத்துக் கொண்டே , செய்தித் தாள் வாசித்துக் கொண்டே காபி குடிப்பது என்று வந்து விட்டது. நல்லவற்றை தெரியாமல் விட்டு விட்டோம். கெட்டவற்றை முனைந்து அறிந்து செய்கிறோம்.


உண்ணும்போது கிழக்கு திசையைப் பார்த்து அமர்ந்து உண்ண வேண்டும். உண்ணும் போது தளர்ந்து, தூங்கி விழுந்து கொண்டு இருக்கக் கூடாது. உணவைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. உணவை சிந்தாமல், வீணாக்காமல் உண்ண வேண்டும்.  


பாடல்

உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண்
டுண்க உகாஅமை நன்கு.

சீர் பிரித்த பின்

உண்ணுங் கால்  நோக்கும் திசை கிழக்குக் கண் அமர்ந்து 
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிது யாதும்  நோக்கான்  உரையான்  தொழுது கொண்டு 
உண்க உகாமை  நன்கு.


பொருள்

உண்ணுங் கால் = உண்ணும் போது

நோக்கும் திசை  = பார்க்கும் திசை

கிழக்குக் கண் அமர்ந்து = கிழக்காக அமர்ந்து

தூங்கான் = தூங்காமல். அதாவது உணவில் மனம் செலுத்தாமல்

துளங்காமை = அசையாமல்

நன்கிரீஇ - நன்றாக அமர்ந்து

யாண்டும் = எப்போதும்

பிறிது யாதும்  நோக்கான் = வேறு ஒன்றையும் பார்க்காமல்

உரையான் = வேறு ஒன்றையும் பேசாமல்

தொழுது கொண்டு உண்க = உணவை தொழுது கொண்டு உண்க

உகாஅமை நன்கு.= சிந்தாமல், வீணாக்காமல் உண்பது நல்லது.

குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். முடிந்த வரை வீட்டில் இதை நடைமுறை  படுத்த முயலுங்கள். 

நல்லது நடக்கட்டும்.


1 comment:

  1. அருமை. ...

    //நமக்கு கிடைத்த மாதிரி முன்னோர்கள் யாருக்குக் கிடைப்பார்கள் ?//

    நன்றாக கூறினீர்கள்

    ReplyDelete