Wednesday, April 1, 2015

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்




வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.

எல்லாமே கடவுள் தான் என்றால், எவ்வளவு வறுமை, எவ்வளவு துன்பம், எவ்வளவு ஏமாற்று , பொய், பித்தலாட்டம் , அநியாயம், அக்கிரமம் என்று இவை அனைத்திற்கும் காரணமும் கடவுள் தானா ?

அப்படி என்றால் கடவுள் இருந்து என்ன பயன் ?

என்று சில பேர் கேட்கலாம்.

இது ஏதோ கடவுள் என்றால் ஒரு தனிப்பட்ட ஆள் என்று நினைத்துக் கொண்டு , அவர் தான் இது அனைத்திற்கும் காரணம் என்று  கேட்கப்படும் கேள்வி.

கடவுள் என்பதை ஒரு உருவத்துக்குள் அடக்க முடியாது. அப்படி அடக்க முடிந்தால்  அந்த உருவத்துக்கு வெளியே இருப்பது கடவுள் இல்லையா என்ற கேள்வி வரும்.

உள்ளே இருப்பதும் கடவுள் தான்

வெளியே இருப்பதும் கடவுள் தான்

இந்த உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள தொடர்பும் கடவுள்தான் என்று சொல்ல்கிறார் கம்பர்.


ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;


ஊன் = உடல் 
உயிர் = உயிர் 
உணர்வு = இந்த உடலும் உயிரும் சேர்ந்து அனுபவிக்கும் அந்த அனுபவம் என்ற உணர்வு  

இந்த மூன்றும் அவன் தான். 

பார்பவனாக இருக்கிறான். 

பார்க்கப் படுபவனாக இருக்கிறான் 

பார்க்கும் அந்த செயலாக இருக்கிறான். 

உள்ளும் அவன். புறமும் அவன். 

சரி , அது ஒரு புறம்  இருக்கட்டும்.

உள்ளும் புறமும் ,  ஊனும், உயிரும் , உணர்வும்  எல்லாம் ஒன்றாக அல்லது ஒருவனாக  இருக்க முடியும் ?

அதை முதல் வரியில் சொல்கிறார்....

வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,


நாம் எல்லாம் எங்கிருந்து வந்தோம் ? நம்மை சுற்றியுள்ள இந்த அனைத்து பொருள்களும்  உயிர்களும் எங்கிருந்து வந்தன ? 

வானத்தில் இருந்து வந்தது ...ஏதோ ஒரு புள்ளி வெடித்து சிதறி, இந்த சூரியன், பூமி, கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் என்று எல்லாம் உண்டாயின. 

இந்த ஐந்து பூதங்களும் வானத்தில் இருந்து ஏதோ ஒன்று வெடித்துச் சிதறி வந்தவைதான்.

நீங்களும், நானும், நான் எழுதும் இந்த கணணியும், நீங்கள் படிக்கும் உங்கள் கணணியும் எல்லாம்  ஏதோ ஒரு பொருளில் இருந்து வந்தவைதான். 

வானில் இருந்து வந்த , எல்லை இல்லாத இந்த பூதங்களின் தொகுப்பு எங்கும்  

ஊனும், உயிரும், உணர்வும், உள்ளும் , புறமும் ஒன்றானவன் அவன்.

அவன்,  கூனியும்,சிறிய தாயாரும் கொடுமை இழைக்க செங்கோல் துறந்து, காட்டையும் , கடலையும் தாண்டிப் போய் , தேவர்களின் துன்பம் துடைத்தவன்.

வான் இகந்து வந்த பூதங்களின் வைப்பு எங்கும் இருப்பவனுக்கு ஒரு கூனியும், சிறிய தாயாரும்   கொடுமை செய்ய முடியுமா ? அப்படி என்றால் அவன் என்ன பெரிய ஆள்   ?

எல்லாம் ஒரு விளையாட்டுத்  தான்.

அப்பா பெரிய கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பார்....வீட்டில் பிள்ளை அவன் முதுகில் யானை ஏறும். அவ்வளவு பெரிய ஆள் இது என்ன சின்னப் பிள்ளைத் தனமாய்   யானை மாதிரி செய்து கொண்டு என்று கேட்க்கக் கூடாது. 

பிள்ளைக்கு சந்தோஷம். அப்பா விளையாடுகிறார். 

உயிர்களுக்கு சந்தோஷம். இறைவன் விளையாடுகிறான். 

நான் முன்பே சொன்னது போல, இந்த பாடலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.  நான் எழுதிய எல்லாவற்றையும் மறந்து நேரடியாக பாடலை அனுபவியுங்கள். 

 தோன்றியது, இறைவனின் தன்மை, அவன் லீலை என்று அனைத்தையும்   ஒருங்கே கொண்ட பாடல். 

 வாசிக்க வாசிக்க ஆழமான அர்த்தங்களை அள்ளித் தரும் பாடல். 

இன்னும் ஒரு முறை நுரையீரல் முழுவதும் காற்றை இழுத்து பெருமிதம் கொள்ளுங்கள்....உங்களுக்கும் தமிழ் தெரியும் என்று பெருமிதம் கொள்ளுங்கள். 

 

 

2 comments:

  1. //உங்களுக்கும் தமிழ் தெரியும் என்று பெருமிதம் கொள்ளுங்கள். //

    Well said. I may not enjoy as you do but certainly I feel something great. Its bless only to know the language.

    Pls Keep up your good work

    ReplyDelete
  2. Thank you for the meaning hidden in the verse. Tamil is such a language which can be interpreted differently by people. Beautiful.. We enjoyed the way you enjoyed it. Way to go.

    ReplyDelete