Saturday, April 11, 2015

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே 


நான் மணிகடிகை  நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துகளை உள்ளடக்கி    இருக்கிறது.

சிறியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் கெட்டவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.

நம்மை விட தாழ்ந்தவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது

எப்போதும் நல்லன அல்லாதவற்றைக் கூறக் கூடாது.


பாடல்

எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

சீர் பிரித்த பின்

எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும் 
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

பொருள்

எள்ளற்க = குறை சொல்லாதே

என்றும் எளியார் = எப்போதும் எளியவரை

என் பெறினும் = என்ன ஆனாலும்

கொள்ளற்க = பெற்றுக் கொள்ளாதே

கொள்ளார்கைம் மேலவா = பெறக் கூடாதவர்களிடம் இருந்து

உள்சுடினும் = உள்ளம் சுடினும்

சீறற்க = கோபம் கொள்ளாதே

சிற்றில் பிறந்தாரை = கீழ் குடியில் பிறந்தவர்களை

கூறற்க = சொல்லதே

கூறல் லவற்றை விரைந்து.= சொல்லக் கூடாதவற்றை

சரி.

இது என்ன பெரிய விஷயமா. மத்தவங்களை கேலி பேசாதே, கெட்டவங்ககிட்ட எதையும் வாங்காதே,  கீழ் குடியில் பிறந்தவர்கள் தவறாக பேசினாலும் சீறி விழாதே, சொல்லக் கூடாததை சொல்லாதே என்பதெல்லாம் ஒரு  அறிவுரையா. இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைக்கலாம்.

கேட்க என்னவோ எளிதாகத்தான் இருக்கிறது.

நடை முறை சிக்கல் எவ்வளவு இருக்கிறது தெரியுமா.

சக்கரவர்த்தியின் மகன். அதுவும் மூத்த மகன். சின்ன பிள்ளையாக இருந்த போது , அரண்மனையில் வேலை பார்த்த ஒரு கூன் விழுந்த கிழவியின் முதுகில் மண் உருண்டை வைத்த அம்பால் அடித்து விளையாடினான்.

அவள் என்ன செய்தாள் ?

பதினாலு வருடம் இராமனையும், அவன் மனைவியியையும், தம்பியையும் காட்டுக்கு  விரட்டினாள். அங்கே சீதை சிறை பிடிக்கப் பட்டு இராவணனிடம் சிறை இருந்தாள். இத்தனையும்  எதனால் ? எளியவள் என்று கூனியை ஏளனம் செய்து அவள் முதுகில் அம்பு அடித்ததால்.

கானகம் போனது இராமனுக்கு வருத்தமா என்றால், ரொம்ப வருந்தினான்.

வருந்தியது மட்டும் அல்ல, சிறியவர்களை இகழாதே. அப்படி இகழ்ந்ததால் நாடிழந்து, காட்டுக்கு வந்து படாத பாடு படுகிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்லி  வருந்தினான் இராமன்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

சிறியர் என்று இகழ்ந்து மற்றவர்களை நோகச் செய்யாதே. இதை மறந்து நாம் ஒரு  தீமை செய்ததால் கூனியின் செயலால் வெந்துயர் கடலில் விழுந்தேன் என்று  நொந்து  கூறுகிறான்.

கேட்க என்னவோ எளிய அறம் தான். எல்லாம் தெரிந்த இராமன் அதை கடை பிடிக்கவில்லை. கஷ்டப் பட்டான். கஷ்டம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இதெலாம் எனக்குத் தெரியாதா என்று அப்படி எளிதாக  தள்ளி விடாதீர்கள்.

சரி, அது மட்டும் அல்ல, 

வள்ளுவர் கூறுகிறார்.....

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்று. 

அளவுக்கு அதிகமாக சேர்த்தால் மயில் இறகு கூட ஒரு வண்டியின் அச்சை முறித்து  விடும்.

இது எங்களுக்குத் தெரியாதா என்று நினைக்கக் கூடாது.

வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எளியவர்கள்தானே என்று ஏளனம் செய்து  சின்ன சின்ன பகைகளை தேடிக் கொண்டால், ஒரு நாள் அவை எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து உன்னை அழித்து விடும் என்கிறார். 

உலகம் யாரை  எப்போது எங்கே கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. 

யாரையும் ஏளனம் செய்யாமல் இருப்பது நலம். 

இராமனுக்கே அந்த கதி என்றால் , நாம் எம்மாத்திரம் ?





6 comments:

  1. Arumaiyana karuthu.. Ezhiyavargalai yezhanam seiyathe... For that you have substantiated with quotations from thirukkural and Ramayana and tried to convince every one on the main point.
    Great work. Keep going. Today's generation needs such facts.

    ReplyDelete
  2. Very nice
    Good comparison against Kamba ramayanam

    ReplyDelete
  3. சொல்ல வார்த்தையில்லை !
    தங்களுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் தமிழ் மணத்தில் தங்களுடைய வலைப்பூவை பற்றிக் கூறலாமா? அறியாதவர்களுக்கு சேரட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. தாரளமாக செய்யுங்கள். நல்லதுதானே. நடக்கட்டும்.

      Delete
  4. கம்ப இராமாயண இணைப்பு அருமை. நன்றி.

    ReplyDelete
  5. மிகவும் அருமை

    ReplyDelete