Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.





3 comments:

  1. Waiting for tomorrow :)

    ReplyDelete
  2. //இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.//
    Hi....any updates ?? Pls don't get me wrong ....like to know Out of curiosity only

    ReplyDelete
    Replies
    1. Not posted yet. Little busy. Will do it today or tomorrow....:)

      Delete