Thursday, April 16, 2015

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?



கவிதைகளைப்  படிக்க, அது எழுதப் பட்ட மொழி மட்டும் தெரிந்தால் போதாது. கவிதைக்குப் பின்னால் இருக்கும் கவியின் மனநிலை புரியவேண்டும். அதை உணர வேண்டும்.

தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருவாசகம் படிக்கும் போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

எவ்வளவு ஆழமான நம்பிக்கை, குழைந்த மனம், பொங்கி பொங்கி வரும் சந்தோஷம், உருகும் பக்தி என்று அனைத்தையும் காணலாம்....காணும் மனம் இருந்தால்.

நாம் இறைவனை  வணங்குகிறோம்.சில பல பாடல்களை அவன் முன்னால் பாடுகிறோம். முடிந்த நாட்களில் கோவிலுக்குப் போகிறோம். மற்ற நேரம் எல்லாம், தினசரி வாழ்கை பிரச்சனைகளில் கிடந்து உழல்கிறோம். பிரச்னை மட்டும் இல்லை, வாழ்கை தரும் சந்தோஷங்களையும் அனுபவிக்கிறோம்  ....அப்பப்ப திரைப் படம் , டிவி , நல்ல தின்பண்டங்ள் , கணவன் மனைவியோடு இன்பம் , குழந்தைகளோடு, நண்பர்களோடு, உறவினர்களோடு என்று ஒன்றையும் விடுவது இல்லை.

இது என்ன பக்தி ?

கடவுளையும், வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு இறை அருள் கிடைக்குமா ? நாம் செய்வது உண்மையான பக்தியா ?

கிடைக்கும் என்கிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் சொல்கிறார்...

எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூடஎனக்குத்  தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும்  உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள்.  எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.

பாடல்

கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.


சீர் பிரித்த பின்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.


பொருள் 

கையார் = கையில்

சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட

என் கரு மாணிக்கமே = என் கரு மாணிக்கமே

என்றென்று = என்று என்று

பொய்யே கைம்மை சொல்லிப்  = பொய்யாகச் சொல்லி

புறமே புறமே ஆடி = உலக விஷயங்களில் மூழ்கி  (இருந்தாலும்)

மெய்யே பெற்று ஒழிந்தேன் = உண்மையான உன்னை பெற்றேன்

விதிவாய்கு இன்று காப்பார் யார் = உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும்

ஐயோ = ஐயோ

கண்ணபிரான் = கண்ணபிரான்

அறையோ இனிப் போனாலே = நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது )

பொய்யாகவேனும் பக்தி செய்து   பாருங்கள்.நாளடைவில் அதுவே உண்மையாக  மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது. 


No comments:

Post a Comment