Thursday, April 2, 2015

இராமாயணம் - மாலையும் பாம்பும்

இராமாயணம் - மாலையும் பாம்பும் 


கடவுள் வாழ்த்து என்பது ஒரு நூலில் முதலில் பாடப் படுவது. கம்பரோ, ஒவ்வொரு காண்டத்திலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடுகிறார். நல்லதை எத்தனை முறை செய்தால் என்ன என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

அவருக்கு இன்னொரு சௌகரியம். கடவுள் அவரது காப்பியத்தின் நாயகன் இராமன். இராமன் மேல் அவருக்கு அவ்வளவு பிரியம். இழைத்து இழைத்து பாடுகிறார்.



அலங்கலில் தோன்றும் பொய்ம்மை 
     அரவு என, பூதம் ஐந்தும் 
விலங்கிய விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
     அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,

     மறைகளுக்கு இறுதி யாவார்!

நாம் பலவற்றின் மேல் ஆசை கொள்கிறோம். அவற்றை அடைய வேண்டும் என்று பல முயற்சிகள் செய்கிறோம். செய்யும் முயற்சிகள் சில பலன் அளிக்கின்றன. பல பலன் அளிப்பதில்லை.

ஆசையோ மிக அதிகம். எவ்வளவு முயன்றாலும் நம்மால் நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

முயற்சியினால் வரும் துன்பம், சோர்வு ஒரு புறம்.

நிறைவேறாத ஆசைகளினால் வரும் துன்பம் இன்னொரு புறம்.

இப்படி கிடந்து அலைகிறோம் .

இது ஏன் நிகழ்கிறது ? இது தெரிந்தும் நாம் ஏன் இதிலிருந்து விடு பட முடியவில்லை ?

காரணம், அறிவு மயக்கம்.

வேறு வேறாக திரிவது எல்லாம் ஒன்றுதான் என்ற தெளிவு இல்லாததால்.

இந்த லட்டு பிடிக்கிறது, அந்த பூந்தி பிடிக்கிறது, பாதுஷா, ஜிலேபி, மைசூர் பாகு என்று  எத்தனையோ இனிப்பு பலகாரங்கள் இருந்தாலும், அடிப்படை ஒன்றுதான்.

மனைவியை பிடிக்கிறது. அந்தப் பெண்ணும் அழகாகத்தான் இருக்கிறாள். இவளும்  அழகு தான். எல்லாம் ஒன்றுதான் என்ற எண்ணம் வருவது இல்லை.

இப்படி இது வேண்டும், அது வேண்டும் என்று மனம் தாவிக் கொண்டே இருக்கக் காரணம்   பொருள்களின் வெளி வடிவத்தில் நாம் மயங்குவதுதான்.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒவ்வொரு புலனுக்கும் ஒரு இன்பம் இருக்கிறது...சுவைத்தல், கேட்டல், காணல் என்று ஒவ்வொரு இன்பம் இருக்கிறது.

இவை எல்லாம் வேறு வேறானதா என்றால் பார்க்க அப்படி இருக்கும். ஆனால் அனைத்து இன்பங்களுக்கும் அடிப்படை ஒன்று தான்.

இந்த தெளிவு வரும்போது துன்பம் தானாகவே போய் விடுகிறது.

இந்த மயக்கம் எப்படி போகும் ?

மாலையை பாம்பு என்று   பயப்படுகிறோம்.   அது பாம்பு அல்ல  மாலை தான் என்ற தெளிவு  வந்த பின் பயம் போய் விடுகிறது.

அறியாமை பயம்.

அறிவின் தெளிவு நிம்மதி, மகிழ்ச்சி.

இந்த அறிவின்  மயக்கம் எப்படி போகும் என்றால் இராமனைக் கண்டால்,

பொருள்


அலங்கலில் = மாலையில்

தோன்றும் பொய்ம்மை = தோன்றும் பொய்மையான தோற்றம்

அரவு என = பாம்பு என்று

பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்

விலங்கிய விகாரப்பாட்டின் = ஒன்றோடு ஒன்று கலந்து வெளிப்பட்ட வடிவங்களின்

வேறுபாடு உற்ற வீக்கம் = வேறு பட்ட வடிவங்களின் பன்மை தோற்றம்

கலங்குவது எவரைக் கண்டால் ? = கலங்கி மறைவது யாரைக் கண்டால் ?

 அவர், என்பர் = அவர் என்று சொல்லுவார்கள்

கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி

இலங்கையில் பொருதார் = இலங்கையில் சண்டை போட்ட

அன்றே = அன்றே


மறைகளுக்கு இறுதி யாவார் = வேதங்களுக்கு முடிவான பலன் ஆவார்

இன்னும் ஆழமான பொருள் கொண்ட பாடல் இது.

இராமனைக் கண்டால் பஞ்ச பூதங்களும் தங்களின் வெளித் தோற்றத்தை விட்டு கலங்கி நிறுக்கும் என்று சொன்ன கம்பர்,  அது யாரைப் பார்த்து என்றால்  இராமனைப் பார்த்து என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். இலங்கையில் சண்டைப் போட்ட இராமன் என்று ஏன் சொல்ல வேண்டும் ?

இராவணன் , இராமனை மனிதன் என்று இகழ்ந்து , ,மதிக்காமல் அழிந்தான்.  இராமன் பரம்பொருள் என்று முதல் சில அடிகளில் சொன்ன கம்பர், அடுத்த சில வரிகளில் , இராவணனைப் போல இராமனை மனிதன் என்று நினைத்து ஏமாந்து  போகாதீர்கள் என்று நினைவு படுத்த "இலங்கையில் சண்டை போட்ட இராமன் " என்று நமக்கு நினைவு படுத்துகிறார்.



விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்

அது என்ன   விகாரம் ?

உள்ளதை இல்லாததாக நினைப்பது.

இல்லாததை உள்ளதாக நினைப்பது.

நிரந்தரம் இல்லாததை நிரந்தரம் உள்ளதாக நினைப்பது.

நிரந்தரமானதை நிரந்தரம் அற்றதாக நினைப்பது.

இவை எல்லாம்  விகாரங்கள்.

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,

என்பார் மணிவாசகர். 

     மறைகளுக்கு இறுதி யாவார்!


வேதங்கள்,அவற்றை விளக்க வந்த உபநிடதங்கள், அவற்றை விளக்க வந்த இதிகாச புராணங்கள்  என்று இவை அனைத்திற்கும் இறுதி ஆனவன்  
அவன்.

படிப்பது எதற்கு ? அவனை அடைய.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்.

கல்வியின், அறிவின் முடிவு அவனைத் தொழுவது என்று முடிக்கிறார் வள்ளுவர். 

அள்ள அள்ள குறையாத அர்த்தங்கள் கொண்டவை கம்ப இராமயணப் பாடல்கள். 

கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள். 

3 comments:

  1. Awesome. ...My sincere suggestion , you should come up with a book with the list of songs and the meaning so far you posted in the blog.

    The way you explain us attract people like me to know only very basic about our literature and values

    ReplyDelete
    Replies
    1. திரு. ரங்காவை வழிமொழிகிறேன்.

      Delete
    2. நானும் வழிமொழிகிறேன்.

      Delete