Sunday, April 26, 2015

வில்லி பாரதம் - கோபமும் தவமே

வில்லி பாரதம் - கோபமும் தவமே 


தவம் என்பது தன்னை மறந்து ஒன்றில் ஒன்றுவது.

யோகம் என்பது இணைவது. சேர்ப்பது.

நாம் பிரிந்து , சிதைந்து கிடக்கிறோம்.

மனம் ஆயிரம் துண்டுகளாய் சிதறிக் கிடக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது சரியில்லை, இது முடியாது, அதை செய்யலாம் ஆனால் உலகம் ஒத்துக் கொள்ளுமா என்று மனம் ஆயிரம் துண்டுகளாய் இருக்கிறது.

மனமும் உடலும் பிரிந்து கிடக்கிறது.

மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல முடிகிறதா ? செய்ய முடிகிறதா  ?

மனம் ஒரு புறம் இழுக்கிறது ...உடல் இன்னொரு புறம் இழுக்கிறது ...கிடந்து அலைகிறோம் .

ஒன்றாகச் சேர்ப்பது தவம், யோகம்.

கோபமும் ஒரு விதத்தில் தவம் தான்.

முழுமையாகச் செய்தால் எதுவும் தவம் தான்...

கோபம் உள்ளவன் தன்னை மறக்கிறான்...

கோபம் தணிந்த பின் "நானா அப்படிச் சொன்னேன் ? நானா அப்படி செய்தேன்  " என்று வியந்து கேட்கிறான். அவன் செய்யவில்லை என்றால் யார் செய்தது...

நான் இல்லாத இடம் அது.

கோபம் மட்டும்தான் இருக்கும். தன்னை மறந்த இடம்.

மகாவீரர் , கோபமும் ஒரு வித தியானம் என்று கூறுகிறார்.

கோபம் வரும் போது "இது சரி இல்லை, நான் கோபப் படக் கூடாது" என்று நீங்கள் இடையில் வராதீர்கள்.

கோபம் மட்டுமே  இருக்கட்டும்.

பாரத்தில் துருவாசர் என்று ஒரு முனிவர் இருந்தார். கோபத்திற்கு  .பெயர் போனவர்.

கோபம் வந்தால் உடனே சாபம் தான். அவர் கோபத்திற்கு எல்லோரும்  பயந்தார்கள்.

அவருக்கு கோபமே ஒரு தவம்.

 கோபத்திலும், சாபத்திலும் அவர் தவம்  வளரும்.

ஒரு நாள் அவரை துரியோதனன் சந்தித்து ,  உபசரித்தான். அப்போது அவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் "

"எனக்கு என்ன வேண்டும்...நீங்கள் இங்கு வந்து என்னை மகிழ்வித்தது போல  பாண்டவர்களையும்  மகிழ்விக்க வேண்டும் " என்று கேட்டான்.

பாண்டவர்கள் துர்வாசரை உபசரிக்க முடியாமல் அவரின் கோபத்திற்கு ஆளானாவர்கள்...துர்வாசர் சபிப்பார் என்பது அவன் எண்ணம்.

துர்வாசர் பாண்டவர்கள் கானகத்தில் இருக்கும் இடத்திற்கு வருகிறார். ....

பாடல்    

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும், 
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன், 
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ, 
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான், 
                           அந்த அடவியின்வாய்.


பொருள்

சாபத்தாலும் = சாபம் தருவதினாலும்

சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும் = சாபம் தருவதினால் வரும் தவத்தாலும்


கோபத்தாலும் = கோபத்தாலும்

பேர் படைத்த = பெயர் பெற்ற

கொடிய முனிவன் துருவாசன் = முனிவனான துருவாசன்

தீபத்தால் மெய் வகுத்தனையான் =  தீபத்தால் செய்த உடல் போன்றவன். உடல் தீபம் போல ஜொலிக்கும். கோபம் என்ற தீயால் உடல் ஜொலிக்கும். கோபாக்கினி.

திகழ் = புகழ் பெற்ற

பல் முனிவர் புடை சூழ = பல முனிவர்கள் புடை சூழ

ஆபத்தால் வந்து அடைந்தவர்போல் = ஆபத்து வந்தது போல

அடைந்தான் = அடைந்தான்

அந்த அடவியின்வாய் = அந்த காட்டுக்கு (பாண்டவர்கள் இருக்கும் கானகத்திற்கு)

தன்னை மறக்கும் எதுவும் தவம்தான்....

பக்தியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கலவியாக இருந்தாலும்...கோபமாக  இருந்தாலும்.

பாரதத்தில் இப்படி ஆயிரம் இருக்கிறது....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.





1 comment:

  1. கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வந்தவரை "ஆஹா, என்ன ஒரு தவம் செய்தவர்" என்று நாம் பாராட்டலாம்!

    ReplyDelete