Sunday, April 5, 2015

தேவாரம் - மண்ணாவது திண்ணம்

தேவாரம் - மண்ணாவது திண்ணம் 



கேதாரம். கேதர்நாத் என்று அழைக்கப்படும் தலம் . புது டெல்லிக்கு அருகில் உள்ள தலம் . பனிபடர்ந்த மலைச் சாரலில் அமைந்த தலம் .

இந்த வாழ்வு ஒரு மாயம். நிலைத்து இருப்பது போலத் தோன்றும். சட்டென்று ஒரு நாள் மாயமாய் மறைந்து விடும்.

"அவரா ? நேத்து வரை நல்லாத்தான இருந்தாரு ...என்ன ஆச்சு " என்று கேட்கும் படி ஆகும்.

படுத்தவர் எழுந்திருக்கவில்லை....ஏன் ? அது தான் magic ...மாயம்.

கடைசியாய் விட்ட மூச்சை உள்ளே இழுக்க முடியவில்லை...ஏன் ? மாயம்.

அன்போடு இருந்த பிள்ளைகளும் மனைவியும் அன்பு மாறுவார்கள்...ஏன் ? மாயாஜாலாம்.

இந்த உடல் மண்ணாவது உறுதியிலும் உறுதி.

இந்த பிறவி நாளும் பாழாகிக் கொண்டு இருக்கிறது. வேலை, உணவு, படிப்பு, சம்பளம், சேமிப்பு என்று செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்தோமே, என்ன நிகழ்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவு நாளை வீணாகக் கழித்து விட்டோம் என்றும் தெரியும்.

இந்த உடல் உணவு போட்டு வளர்த்தது. பசி, அதனால் உணவு , அதனால் வளர்ந்த உடல் இது. பசி என்ற நோய் செய்த உடல் இது. நோயில் வளர்ந்த உடல்.

இருக்கும் வரை குறையாமல் அறம் செய்யுங்கள். "தாழாது அறம் செய்யுங்கள்". வருடத்துக்கு ஒரு முறை நன்கொடை கொடுத்தாலும் பரவாயில்லை. அதை குறைத்து விடாதீர்கள். தாழாது செய்யுங்கள்.

திருமாலும், பிரமனும் கீழும் மேலும் அறிய நின்றவன் இருக்கும் இடம் திருக் கேதாரம்.

பாடல்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே.                                            - (சுந்தரர்)

பொருள்

வாழ்வாவது மாயம் = இந்த வாழக்கை ஒரு மாயம்

மிது மண்ணாவது திண்ணம் = இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் = பாழாகிறது இந்த பிறவிக் கடல்

பசிநோய்செய்த பறிதான் = இந்த உடல் (பறி ) பசி என்ற நோய் செய்தது

தாழாதறஞ் செய்ம்மின் = குறையாமல் அறம் செய்யுங்கள்

தடங் கண்ணான் = தாமரைக் கண்ணன் (திருமால்)

மல ரோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

கீழ்மேலுற = கீழும் மேலும் செல்ல

நின்றான் = நின்றவன்

திருக் கேதாரமெ னீரே = திருக் கேதாரம் என்று சொல்லுங்கள்

பசி நோய் செய்த பறிதான் என்பதற்கு தாய் தந்தையரின் காமப் பசியில் விழைந்தது இந்த உடல் என்றும் கொள்ளலாம்.

நேரம் இருப்பின், கேதார்நாத் ஒரு முறை சென்று வாருங்கள்.

சுந்தரரும், ஞான சம்பந்தரும் சென்றிருக்கிறார்கள்.

 

1 comment:

  1. "Pasi noi seitha pari" The intense meaning derived from this line is thought provoking. It is sad that we fall into this vicious cycle of hunger, sleep and physical comfort

    ReplyDelete