Thursday, April 9, 2015

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை 



அது ஒரு சின்ன கிராமம்.

அங்குள்ள மக்கள் காலையில் வயலுக்கு, காட்டுக்கு என்று வேலைக்குப் போய் விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.

அவளுடைய காதலனும் அவள் இருக்கும் வீட்டின் வழியாகத்தான் தினமும் வருவான்.

இன்று ஏனோ இன்னும் வரவில்லை. மாலை மங்கிக் கொண்டே போகிறது. இன்னும் வரவில்லை.

ஒரு வேளை வேறு வழியில் போய் இருப்பானோ ?

ஒரு வேளை அவனுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமோ ?

ஏன் இன்னும் வரவில்லை ?

தவிக்கிறாள் அவள்.

அவன் வருவான், அவனுக்குத் தர வேண்டும் என்று ஆசை ஆசையாக பூக்களைச் சேர்த்து மாலையாக செய்து, அவன் வரும் வழி பார்த்து காத்திருக்கிறாள்.

ஒரு வேளை வர மாட்டானோ ?

இந்த மாலையை என்ன செய்வது ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மாக்கள் = வேலை செய்த பின் மக்கள்

கருவி ஒடுக்கிய = அவர்களின் அரிவாள், மண்வெட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு

மம்மர்கொள் மாலை = மயக்கம் தரும் மாலை நேரத்தில்

மலராய்ந்து பூத்தொடுப்பாள் = ஒவ்வொரு பூவாக தேர்ந்து எடுத்து மாலை தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலை

இட்டுக் = தரையில் நழுவ விட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்க்கு

இம்மாலை என்செய்வ தென்று = இந்த மாலை என்ன செய்வது என்று

காதல், தவிப்பு, ஏக்கம் என்று அனைத்தையும் நாலு வரியில் அடக்கி பல நூற்றாண்டுகளை தாண்டி உங்களை வந்து அடைகிறது இந்தப் பாடல்.

பெயர் தெரியாத, முகம் தெரியாத அந்த பெண்ணின் சோகம்  நம்மையும் என்னவோ செய்கிறது.

காதல் என்றும் பசுமையானதுதான்.





2 comments:

  1. This gives a feeling that people who lived those days were more progressive than people of these days. Pretension was less l feel.

    ReplyDelete
  2. லேசாக மணம் வீசும் மலர் போன்ற பாடல்!

    ReplyDelete