Sunday, April 5, 2015

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் 


இராமாயணம் என்றால் என்ன ?

இராமன் + அயனம் = அயனம் என்றால் வழி. உத்தராயணம், தக்ஷினாணயம் என்று சூரியனின் வழியைச் சொல்லுவது போல, இராமனின் வழியை சொல்லுவது இராமாயணம்.

எது அவன் வழி ? அவன் நடந்து சென்ற பாதை எது ? அதில் போய் அவன் எதை அடைந்தான் ?

"நல் அறம் நிறுத்த" நல்ல அறங்களை நிலை நிறுத்த அவன் வந்தான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனித குலம் எது சரி , எது தவறு என்று தெரியாமல் தவிக்கின்ற நேரத்தில் எல்லாம் அற வழியை காண்பிக்க பெரியவர்கள் தோன்றுகிறார்கள்.

வெயில் அதிகமா இருந்தால் மழை வருவது போல.

இருள் அதிகமாக இருந்தால் பகல் வருவது போல.

காலம் காலமாய் இது நிகழ்கிறது.

அப்படி வந்தவன் இராமன். அவனை பலர் புரிந்து கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல, இன்றும்.

யாருக்கு அவன் புரிவான் ?

"ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் " - ஒருங்குதல் என்றால் ஒன்று படுத்தல், சேர்தல், இணைதல், கூடுதல், குவிதல், ஒருபடியாதல், அழிதல் மற்றும்  ஒடுங்குதல்  என்று பல பொருள் உள்ளது. உணர்வு ஒன்று பட்டால், அவனை உணரலாம். உணரலாம் என்று தான் சொன்னாரே தவிர அறியலாம் என்று சொல்லவில்லை. இறை என்பது ஒரு உணர்ச்சி. அது ஒரு பொருள் இல்லை. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்.

விராதன் என்ற அரக்கன் இராமனோடு சண்டை இட வருகிறான். அந்த இடத்தில் இராமனைப் பற்றி கம்பர்  கூறுகிறார்.

பாடல்


ஓம் அராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை,  நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அதுகொடு எற்ற வரலும்.


பொருள் 

ஓம் அராமரை = ஓம் என்ற பிரணவத்தின் பொருளான அந்த இராமனை

ஒருங்கும் = ஒன்று படும்

உணர்வோர் உணர்வுறும் = உணர்வுகளை உடையவர்கள் உணரும்

நாமர் ஆம் அவரை = நாமம் கொண்ட அவரை

நல் அறம் நிறுத்த = நல்ல அறங்களை நிலை நிறுத்த

நணுகித் = ஒன்று சேர்ந்து, அருகில் வந்து, அணுகி.

தாம் அரா அணை துறந்து = தன்னுடைய பாம்பணையை துறந்து

 தரை நின்றவரை, = தரையின் மேல் நின்ற அவரை

ஓர் = ஒரு

மா மராமரம் = பெரிய மரா மரத்தை

இறுத்து = பெயர்த்து எடுத்து

அதுகொடு எற்ற வரலும் = அதைக் கொண்டு போருக்கு வரும் போது

அரக்கரகளுக்கு இறைவன் எதிரில் நின்றபோதும் தெரிவது இல்லை.

இறைவனை அறியாதவர்கள் தான் அரக்கர்களோ ?



No comments:

Post a Comment