Monday, April 6, 2015

தேவாரம் - அப்புறம் செய்யலாம்

தேவாரம் - அப்புறம் செய்யலாம் 


அப்புறம் செய்யலாம் , அப்புறம் செய்யலாம் என்று எவ்வளவோ நல்ல காரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

"நிறைய படிக்கணும்...எங்க நேரம் இருக்கு...எல்லாம் retire ஆனதுக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன் ..."

"போகணும்...காசி, இராமேஸ்வரம்..இப்படி நாலு தலங்களுக்கு போகணும். எங்க நேரம் இருக்கு....பிள்ளைங்க படிப்பு, அவங்க பள்ளிக் கூடம் ...எல்லாம் முடிந்த பின் போகணும்..."

இப்படி பலவற்றை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்...

பின்னாளில், நாம் நினைக்கும் நாள் வரை நாம் இருக்க வேண்டுமே ? நாம் செல்லும் நாள் என்றென்று நமக்குத் தெரியாதே ? நாம் நினைத்து வைத்த நாளை வராமலே போய் விட்டால் ?

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார் வள்ளுவர். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைத்து நல்லது செய்வதை தள்ளிப் போடாதீர்கள்.

நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்த உடம்பை சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம். எத்தனை நாள் இந்த உடம்பு நம்மோடு இருக்கும் ? நாயோ, நரியோ, தீயோ, கொண்டு செல்லும் உடல் இது. இதன் மேலா இத்தனை ஆசை ? இத்தனை பற்று. இதற்காகவா நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறீர்கள் ?

வறியவர்களுக்கு, இல்லை என்று வந்தவர்களுக்கு சோறும் நீரும் நல்ல வார்த்தை சிலதும் சொல்லுங்கள். அப்படி செய்யும் நல்லவர்கள் வணங்கும் தலம் கேதாரிநாத்.


பாடல்

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

பொருள்

பறியே = உடலையே

சுமந் து = சுமந்து 

உழல்வீர் = துன்பப் படுவீர் 

பறி = இந்த உடலானது

நரி கீறுவ தறியீர் = நரி கீறுவது அறியீர்

குறி = குறித்த நாளில்

கூவிய = சொல்லிய படி

கூற்றங்கொளு நாளால் = எமன் வந்து உங்கள் உயிரை கொண்டு செல்லும் நாளில்

அறம் உளவே = அறம் (செய்ய) முடியுமா ?. முடியாது

அறிவானிலும் அறிவான் = நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொன்னால் அறிவது எது ? அறிந்து கொள்ளப் படுவது எது ? அறியும் செயல் எது ? அறிவுக்கு அப்பால் நின்று நம் அறிவை செலுத்துபவன்

நல நறுநீரொடு =நல்ல தூய்மையான நீரோடு 

சோறு = சோறும்

கிறிபேசி = நல்ல வார்த்தைகள் பேசி

நின் றிடுவார் = எப்போதும் மற்றவர்களுக்கு வழங்கும் அவர்கள்

தொழு கேதாரமெ னீரே = தொழும் தலம் கேதாரம் என்ற தலமாகும்.


இந்த கோடை விடுமுறைக்கு குளிர்ச்சியாக கேதாரநாத் சென்று வாருங்கள். 

பின்னால் முடியுமோ என்னவோ ?

1 comment:

  1. A visit to kedarnath may have to be planned well in advance. But feed the poor and the needy needs not much effort. Even our own people we can try to be polite.You have reflected thoughts of this generation perfectly.

    ReplyDelete