Thursday, May 28, 2015

பிரபந்தம் - மனச் சுடரை தூண்டும் மலை

சிலர் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் கோவிலுக்குப் போய் இறைவனிடம் வேண்டுவார்கள். எனக்கு அது வேண்டும், எது வேண்டும், என்று வேண்டிக் கொள்வார்கள்.

வேண்டியது கிடைத்தவுடன், இறைவனை மறந்து விடுவார்கள். அடுத்த தேவை வரும் வரை, அந்த நினைவே கிடையாது.

வேறு சிலர், "எனக்கு வேண்டியதெல்லாம் நீ தந்திருக்கிறாய், நன்றி " என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.  போய் விட்டு வருகிறேன் என்று விடை பெற்றுச் செல்வார்கள்.

வேறு சிலரோ, தேவையும் இல்லை, நன்றியும் இல்லை,  பக்தி மட்டும் மனதில் இருக்கும். இறைவனை தொழுவது மட்டும் தான் உண்டு. அதற்கு பிரதி பலனாக ஒன்றையும் கேட்பது இல்லை.

இவர்களைப் பற்றி பொய்கை ஆழ்வார் கூறுகிறார்

பாடல்  

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.


எழுவார் = கேட்டது கிடைத்தவுடன் எழுந்து போய் விடுவார்கள்

விடைகொள்வார் = சில பேர் சொல்லிக் கொண்டு போவார்கள்.

ஈன்துழா யானை = இனிய துளசி மாலை அணிந்தவனை

வழுவா வகை = குற்றமில்லாத வகை. குற்றமில்லாத என்பதற்கு வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காத என்று பொருள் சொல்கிறார்கள். 

நினைந்து = நினைத்து

வைகல்  தொழுவார் = எப்போதும் வணங்குவார்கள்

வினைச்சுடரை = வினை என்னும் தீயை

நந்துவிக்கும் = அணைக்கும்

வேங்கடமே = திருவேங்கட மலை

வானோர் = வானோர்

மனச்சுடரைத் தூண்டும் மலை = மனதில் உள்ள சுடரை தூண்டும் மலை

வினையான சுடரை அவிப்பவனும் அவன்.

மனதில் உள்ள சுடரை தூண்டி அதை பிரகாசிக்கச் செய்வதும் அவன்.

 


1 comment: