Wednesday, June 10, 2015

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே 



பிள்ளை இல்லை என்றால் அது ஒரு கவலை.

பெற்ற பிள்ளையை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை என்றால் அது எவ்வளவு துன்பமாக இருக்கும் ஒரு தாய்க்கு ?

தேவகி கண்ணனை பெற்றாள் .

பெற்ற அன்றே அவனை ஆயர்பாடிக்கு அனுப்பி விட்டாள் .

அவனை, கொஞ்சி கொஞ்சி வளர்த்தது எல்லாம் யசோதைதான்.

தேவகி, கண்ணனை தாலாட்டி , சீராட்டி , கொஞ்சி வளர்க்க முடியவில்லையே என்று உருகி வருந்திப் பாடுவதாக குலசேகர ஆழ்வார் பத்துப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் வரும்.

பாடல்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

சீர் பிரித்தபின்

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ,  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று உன்னை என் வாயிடை 
நிறைய தால் ஒலித்திடும் திருவினை  இல்லாத் தாயரில் கடையாயின தாயே

பொருள்

ஆலை = ஆலையில்

நீள் கரும்பு = நீண்ட கரும்பு

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

அம்புயத் = அன்புஜம், தாமரை போன்ற

தடங் = அகன்ற

கண்ணினன் தாலோ = கண்ணினைக் கொண்டவனே தாலேலோ

வேலை = கடல்

நீர் = நீர்

நிறத்து = நிறம்

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

வேழப் = யானை

போதகம் = குட்டி

அன்னவன் தாலோ = போன்றவனே தாலேலோ

ஏலவார் குழல் = மணம்மிக்க  முடியை உடைய 

என் மகன் தாலோ = என் மகனே தாலேலோ

என்று = என்று

உன்னை  = உன்னை

என் வாயிடை = என் வாயால்

நிறைய = நிறைய

தால் ஒலித்திடும் = தாலாட்டுப் பாடிடும்

திருவினை = திருவினை , புண்ணியம்

இல்லாத் தாயரில் = இல்லாத தாயரில்

கடையாயின தாயே = மிக கடைப் பட்டவள் நானே

கரும்பு போல இருப்பானாம்....கண்ணன் தலையில் மயில் பீலி செருகி இருப்பான். கருப்பாய் இருப்பான். அது போல கரும்பும் கருப்பாய் தலையில் தோகையோடு இருக்கும். பொருத்தமான உதாரணம்.

கண்ணன், பாலும், வெண்ணையும், நெய்யும் தின்று குண்டு குண்டாக கறுப்பாக இருப்பன் அல்லவா ...எனவே யானைக் குட்டி என்றாள்.

தால் என்றால் நாக்கு என்று பொருள்.

தால் + ஆட்டு = தாலாட்டு.

தாய்மார்கள், குழந்தையை தூங்கப் பண்ண "ரோ ரோ...",. "லா லா " என்று  நாக்கை அசைத்து  ஒலி எழுப்புவார்கள். குழந்தைக்கு மொழி தெரியாது. அந்த நாக்கு அசையும் சத்தத்தில் அது தூங்கிப் போய்விடும். எனவே அதற்கு தாலாட்டு என்று பெயர்.

எப்படி எல்லாம் யசோதை கண்ணனை கொஞ்சி, தாலாட்டி சீராட்டி இருப்பாள்....எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருந்துவதாக  குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

தேவகியே கூட இவ்வளவு உருகி இருப்பாளா என்று தெரியாது. ஆழ்வார் அவ்வளவு உருகுகிறார்.

மனம் ஒன்றி வாசித்துப் பாருங்கள்....மனதுக்குள் என்னவோ செய்யும்.

 





1 comment: