Saturday, June 13, 2015

பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும்

பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும் 


இன்பமும் நிம்மதியும் எங்கு இருக்கிறது ?

சேவை செய்வதில் இருக்கிறது. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் மனதில் ஒரு திருப்தி, நிம்மதி, சுகம் எப்போது வரும் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது . பலன் கருதா உதவி செய்யும் போது இன்பம் பிறக்கும்.

எனக்கு, எனக்கு என்று ஆலாய் பறந்து பணம் சேர்த்துக் கொண்டே இருந்தால் செல்வம் பெருகும், ஆனால் இன்பம் பெருகுமா ?

பக்தி மார்கத்தில் இதை இறைவனுக்கு அடிமை செய்வது என்று சொல்கிறார்கள். அடிமை என்றால் ஏதோ கேவலமான வார்த்தை இல்லை. பலன் எதுவும் எதிர் பார்க்காமல், அவனுக்கு என்று செய்வது. அவ்வளவுதான்.

எல்லோருமே அவன் குழந்தைகள் தானே ? அவனுக்குச் செய்தால் என்ன, அவன் குழந்தைகளுக்குச் செய்தால் என்ன ?

பிரதி பலன் எதிர்பாராமல் பிறருக்குச் செய்யும் உதவி, அவனுக்குச் செய்யும் பக்திதான்.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடு, செல்வம் கொடு, பட்டம் , பதவி கொடு என்று கேட்போம்.

குலசேகர ஆழ்வார் இதையெல்லாம் வேண்டாம் என்று ஆண்டவனை வேண்டுகிறார்.

இந்த உடல் இருக்கிறதே, ஒவ்வொரு நாளும் மாமிசத்தால் எடை ஏறிக் கொண்டே போகிறது.  வேண்டாம் இந்த உடலே வேண்டாம்.  பெருமாளே உனக்கு அடிமை செய்வது மட்டும் தான் வேண்டும். திருவேங்கட மலையில் உள்ள கோனேரி என்ற தீர்த்தத்தில் குருகு (நாரை) ஆக பிறப்பதையே வேண்டுவேன் என்கிறார்.

பாடல்

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

சீர் பிரித்த பின்

ஊன் ஏறு  செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ்  வென்றான் அடிமை  திறம் அல்லாமல் 
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

பொருள் 

ஊன் ஏறு = மாமிசம் ஏறும்

செல்வத்து = செல்வத்துடன் கூடிய

உடற் பிறவி  = இந்த உடலை

யான் வேண்டேன் = நான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ்  = ஏழு காளைகளை

 வென்றான்  = வென்ற கண்ணனின்

அடிமை  திறம் அல்லாமல் = அடிமை செய்யும் தொழில் அல்லாமால்

கூன் ஏறு சங்கம் = வளைந்த சங்கை

இடத்தான் தன் = இடக்கையில் கொண்ட

வேங்கடத்து = திரு வேங்கட மலையில்

கோனேரி = கோனேரி என்ற தீர்த்தத்தில்

வாழும் = வாழும்

குருகாய்ப் பிறப்பேனே = நாரையாகப் பிறக்கும் படி வேண்டுவேன்

அது என்ன மனிதப் பிறவியை வேண்டாம், ஆனால் நாரையாகப் பிறக்க வேண்டும் என்கிறாரே ஆழ்வார் என்று நமக்குத் தோன்றும்.

மனிதப் பிறவியை விட நாரை உயர்ந்ததா ?

இல்லை. ஆனால், விலங்குகளிடம் பேராசை இல்லை, பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை, அளவுக்கு அதிகமாக உண்பது இல்லை, மிக எளிமையாக வாழ வேண்டும் என்று சொல்ல வருகிறார் ஆழ்வார்.

இதே கருத்தை மாணிக்க வாசகரிலும் நாம் பார்க்கலாம்.

இவர் நாரையாக பிறக்க வேண்டும் என்றார் ,அவர் கன்றை ஈன்ற பசுவைப் போல ஆக வேண்டும்  என்றார்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

(கற்றா = கன்றை ஈன்ற ஆ , பசு )

நாரை,  நீர் இருக்கும் வரை இருக்கும். நீர் வற்றிப் போனால் திருவேங்கட மலையை விட்டுப்   போய்விடுமே ...என்ற சந்தேகம் ஆழ்வாருக்கு வருகிறது.

அதற்கு அடுத்த பாசுரத்தில் சொல்கிறார் ஆழ்வார்....



1 comment:

  1. இறைவனுக்கு அடிமையாய் இருப்பது என்றால் என்ன என்று என்ன வைக்கிறது இந்தப் பாடல். எடுத்துக் கொடுத்து விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete