Monday, June 15, 2015

பிரபந்தம் - மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவனே

பிரபந்தம் - மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவனே 


என்ன வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்...

நிறைய செல்வம்,  நல்ல ஆரோக்கியம், புகழ், அதிகாரம், செல்வாக்கு...வேண்டும் என்று கேட்போம். அதுவும் அந்த செல்வம் குறையக் கூடாது. செலவழிக்க செலவழிக்க அப்படியே இருந்து கொண்டு இருக்க வேண்டும்.

மரணத்திற்குப் பின், மேல் உலகம் போன பின், அந்த ஊரிலும், செல்வம், புகழ், அதிகாரம், செல்வாக்கு வேண்டும் என்று கேட்போம்.

இந்த இரண்டையும் கொடுத்தாலும் வேண்டாம் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

இது வேண்டாமாம்.

இதை விட பெரிதாக என்ன கேட்டு விடப் போகிறார் என்று பார்த்தால், வேங்கட மலையில் உள்ள குளத்தில் மீனாக பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

மகான்களுக்கு செல்வத்தில் பற்று இல்லை. அதிகாரம், புகழ், பெண், இதில் எல்லாம் பற்று இல்லை.  இறைவனோடு சம்பந்தப் பட்டிருக்க வேண்டும், அவன் கூடவே  இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பாடல்

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

பொருள்


ஆனாத = குறையாத

செல்வத் = செல்வத்தோடு

அரம்பையர்கள் தற் சூழ = அரம்பையர்கள் போன்ற தேவ மாதர்கள் சூழ

வானாளும் = தேவ லோகத்தை ஆளும்

செல்வமும் = செல்வமும்

மண்ணரசும் = மண்ணில் பெரிய அரசும்

யான் வேண்டேன் = நான் வேண்ட மாட்டேன்

தேனார் = தென் சொரியும்

பூஞ் = பூக்கள் நிறைந்த

சோலைத் =  சோலைகள் நிறைந்த

திருவேங்க டச்சுனையில் = திரு வேங்கட மலையில் உள்ள குளத்தில்

மீனாய்ப் = மீனாகப்

பிறக்கும் = பிறக்கும்

விதியுடையே னாவேனே = விதி உடையவன் ஆவனே.

முந்தைய பாசுரத்தில் குருகாய் (நாரையாக ) பிறக்கும் படி வேண்டினார்.

நாரைக்கு சிறகு இருக்கிறது. பறந்து வேறு மலைக்குப் போய் விடலாம். குளத்தில் நீர் வற்றினால் நாரை பறந்து போய் விடும்.  துன்பம் வந்த காலத்தில் இறைவனே இல்லை, இறைவன் இரக்கம் இல்லாதவன் என்று அவனை வைபவர்களும் உண்டு.  அது போல் துன்பம் வந்த காலத்தில் விட்டு விட்டு ஓடி  விடாமல், எப்போதும் அவன் கூடவே இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

குளத்தில் உள்ள மீன் , நீர் வற்றினாலும் அதிலேயே கிடந்து மடியும். குளம் விட்டு குளம்  போகாது. எனவே எப்போதும் வேங்கட மலையிலேயே இருக்கும் பேற்றினை வேண்டுகிறார்.



2 comments:

  1. இந்த இரண்டு பாடல்களில் நாரைக்கும், மீனுக்கும் உள்ள வேற்றுமை அருமையானது. உன் விளக்கம் இல்லாவிட்டால், அந்த இரண்டு பாடல்களைப் படித்திருக்க முடியாது, படித்தாலும் இந்த நுணுக்கமான செய்தி புரிந்திருக்காது. நன்றி.

    ReplyDelete