Wednesday, June 17, 2015

பிரபந்தம் - பெருமாளை தரிசனம் பண்ண சிறப்பு வழி

பிரபந்தம் - பெருமாளை தரிசனம் பண்ண சிறப்பு வழி 


பெருமாளை தரிசனம் பண்ண எத்தனையோ பேர் காத்து இருப்பார்கள். எத்தனையோ நாள் காத்து இருப்பார்கள். நாமும் காத்து இருக்க வேண்டி இருக்கும்.

ஆழ்வாருக்கு பொறுமை இல்லை.

உடனே பார்க்க வேண்டும் பெருமாளை.

குருகாய் பிறப்பேன், மீனாய் பிறப்பேன் என்று நினைத்தார்.

குருகு என்றால் பறந்து போகும்.

மீன் என்றால் நீர் வற்றினால் இறந்து போகும்.

பின் எப்படி பெருமாளை தரிசிப்பது.

ஆழ்வார் ஒரு வழி கண்டு பிடித்தார்.

பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் ஒரு ஆளாக போனால் மற்றவர்கள் விலகி வழி  விட்டு விடுவார்கள். நாம் நேராக பெருமாளுக்கு பக்கத்தில் போய் விடலாம். அது மட்டும் அல்ல, ஜர்கண்டி ஜர்கண்டி என்று விரட்டவும்  மாட்டார்கள்.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கேயே இருக்கலாம் என்று நினைத்து, பெருமாள் உமிழும் பொன் வட்டில் கொண்டு செல்லும் ஆள் ஆவேனே என்று வேண்டுகிறார்.

பாடல்


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

சீர் பிரித்த பின் 

பின்னல் இட்ட  சடையானும் பிரமனும் இந்திரனும் 
துன்னிட்டு  புகல் அரிய  வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடர் ஆழி வேங்கடக் கோன் தான் உமிழும் 
பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேனாவேனே

பொருள் 

பின்னல் இட்ட  சடையானும் = சிவனும்

பிரமனும் = பிரமனும்

இந்திரனும் = இந்திரனும்

துன்னிட்டு  = நெருங்கி

புகல் அரிய = உள்ளே செல்ல முடியாத

வைகுந்த நீள்வாசல் = நீண்ட வைகுந்தத்தின் வாசலில்

மின்வட்டச்  = மின்னல் வட்டம் இடுவதைப் போன்ற

சுடர் = சுடர் விடும்

ஆழி = சக்கரத்தைக் கொண்ட

வேங்கடக் கோன் = திரு வேங்கட மலையின் தலைவன்

தான் உமிழும் = அவன் உமிழும்

பொன் வட்டில் = தங்க வட்டில் (எச்சில் உமிழும் பாத்திரம் )

பிடித்து = பிடித்து

உடனே புகப் பெறுவேனாவேனே = உடனே உள்ளே செல்வேன்

சரி, அது என்ன சிவன், பிரமன், இந்திரன் போக முடியாத வாசல் ? ஆழ்வாருக்கு  சிவன் மேல் கோபமா ? பெரியவர்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு இருக்குமா ? துவேஷம் இருக்குமா ?  

இருக்கவே இருக்காது.

சரியாகப் புரிந்து கொள்ளமால், பல பேர் வைணவம் படித்தால் சைவம் படிப்பது இல்லை, சைவம் படித்தால் வைணவம் படிப்பது இல்லை ஒரு வெறுப்பு கொள்கிறார்கள். 

சைவ வைணவ சண்டை எல்லோரும் அறிந்ததே. 

ஆழ்வார் என்ன சொல்ல வருகிறார் என்றால் 

சிவன் - எல்லாம் துறந்து சுடுகாட்டில் போய் இருக்கிறான். சிவன் துறவறம்.

பிரமன் - கல்விக் கடவுளான சரஸ்வதியை மணந்தவன். பிரமன் ஞான மார்க்கம். 

இந்திரன் - நீண்ட பல யாகங்களைச் செய்து, அரக்கர்களை வென்று , தேவலோக பதவி பெற்றவன். அது கர்ம யோகம். 


இறைவனை கர்ம யோகத்தாலோ, ஞான யோகத்தாலோ, துறவினாலோ இறைவனை அடைவது என்றால் நீண்ட காலம் ஆகும். நீள் வைகுண்ட வாசல். 

அதை விட பக்தி மார்க்கம் எளிதானது நிரந்தரமானது என்று சொல்ல வருகிறார். 

ஞான மார்கத்தில் சென்றாலும் பின்னால் சந்தேகம் வரும். வெளியே அனுப்பி விடுவார்கள். மீண்டும் உள்ளே செல்ல வேண்டும். 

பக்தி அப்படி அல்ல. ஒரு முறை அடைந்து விட்டால், எப்போதும் அவன் கூடவே இருக்கலாம் என்று சொல்ல வருகிறார். 

சிந்திப்போம்.

 

2 comments:

  1. எப்படித்தான் இப்படி எல்லாம் உள் அர்த்தம் புரிகிறதோ?

    ReplyDelete
  2. அப்ப சிவன் கடவுள் இல்லை போல

    ReplyDelete