Monday, July 13, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல் 



சீதையை அடைய ஒரு வழி தருமாறு கடலை நோக்கி தவம் செய்கிறான் இராமன்.

"இளமையான பெண்ணான சீதையை மீட்க ஒரு வழி தருக என்று, வேத முறைப்படி அடுக்கிய தருப்பை புல்லின் மேல் கிடந்து விதிப் படி வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்" இராமன்.

பாடல்


'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !'
என்னும்

பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;

வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.

பொருள்

'தருண மங்கையை = இளமையான பெண்ணை. தருணம் என்றால் நேரம். சரியான தருணத்தில் வந்தாய் என்று சொல்வதைப் போல. இந்த இடத்தில் காலம், இளமைக் காலம்.

மீட்பது = மீட்டுக் கொண்டு வர

ஓர் நெறி தருக ! = ஒரு வழி தருக

என்னும் = என்ற

பொருள் நயந்து, = பொருளை வேண்டி

நல் நூல்  நெறி = நல்ல நூல்களில் சொல்லப் பட்ட முறைப்படி

அடுக்கிய புல்லில் = அமைக்கப் பட்ட தருப்பை புல்லின் மேல்

கருணைஅம் கடல் கிடந்தனன் = கருணைக் கடலான இராமன் கிடந்தான்

கருங் கடல் நோக்கி = கருமையான கடலை நோக்கி. கருணைக் கடல் கருங் கடலை நோக்கி தவம் செய்தான்.


வருண மந்திரம் எண்ணினன் = வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்

விதி முறை வணங்கி = விதிப்படி வணங்கி


அது என்ன பொருள் நயந்து ? என்ன பொருளைக் கேட்டான் இராமன் ? "ஒரு வழி சொல்லு " என்று தானே கேட்டான். அது எப்படி பொருளாகும் ?

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழித்து நமக்கு உதவி செய்கிறார் என்றால்  அதுவும் ஒரு பொருள் போலத்தான்.  நமக்கு ஒரு சிக்கல். நண்பரிடம்  யோசனை கேட்கிறோம். அவரும், யோசித்து வழி சொல்கிறார். அவர் நமக்காக   யோசிக்க செலவழித்த நேரமும் அவருடைய பொருள் போலத்தான். நாம் அவருடைய பொருளை பெற்றுக் கொள்வது  போலத்தான்.

பிறருடைய பொருள் மேல் ஆசைக் கொள்ளக் கூடாது என்று நமக்குத் தெரியும். 

அவர்களுடைய நேரமும் அவர்களுடைய பொருள் போலத்தான். அதை கேட்பதும்  அவர்களிடம் பொருளை, பணத்தை கேட்பதும் ஒன்றுதான். 

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறார் என்றால் அவர் நமக்கு  பொருள் தருகிறார் என்று தான் அர்த்தம். 

என் வீட்டில் கல்யாணம் அதுக்கு வா, என் வீட்டில் க்ரஹப் பிரவேசம் அந்த விஷேத்துக்கு வா என்று நண்பரகளையும் உறவினர்களையும் அழைக்கிறோம். அவர்களும் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு நம் வீட்டு  விழாவுக்கு வருகிறார்கள். அதற்காக அவர்கள் செலவழித்த நேரம் அவர்கள் நமக்கு  தந்த பொருள் போல. 

பிறருடைய நேரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் பொருளை மதிப்பது போல. எப்படி மாற்றான் பொருளை விரும்ப மட்டாமோ அது போல மாற்றான் காலத்தையும் விரும்பக் கூடாது. 

அவர்களின் நேரத்தைக் கேட்பதற்கு அவர்களிடம் கை ஏந்தி பொருள் பெறுவது போல கூச வேண்டும். 

புரிகிறதா ? ஏன் வருணபடலம் என்று ஒன்றை கம்பர் வைத்தார் என்று ?






1 comment:

  1. பொருள் என்றால் அர்த்தம் என்றும் கொள்ளலாமே. ஆனால், நீ சொல்லியது இன்னும் அருமை.

    ReplyDelete