Thursday, July 16, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்


சீதையை சென்று அடைய வழி சொல்லுமாறு வருணனை வேண்டி இராமன் தவம் இருந்தான்.

இராமன் தர்ப்பைப் புல்லின் மேல் படுத்து வெயிலில் கிடக்கிறான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.

சூரியன் இராமனை சுட்டு எரிக்கிறான்.

சற்று நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

சரவர்த்தி மகன். பஞ்சணையில் , மாளிகையில் படுத்து உறங்க வேண்டியவன் இப்போது காட்டில் தரையில், தர்பை புல்லின் மேல் வெயிலில் கிடக்கிறான். பெற்றவள் பார்த்தாள் சகிப்பாளா ?

கம்பனுக்குத் தாங்க முடியவில்லை.  தவிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு ஊழிக் காலம் போல செல்கிறது.

எப்படி அந்த காட்சியை எழுதுவது ? இராமனை சூரியன் சுட்டான் சுட்டான் என்று சொல்லக் கூட அவனால முடியவில்லை.

சூரியன், தன் கிரணங்களால் இராமனின் கன்னத்தை வருடினானனாம்.

பாடல்

பூழி சென்று தன் திரு உருப்
    பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம்
    வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என,
    ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன்,
    எறி கடற்கு இறைவன்.

பொருள் 


பூழி சென்று = புழுதி உள்ள கடற்கரையில்

"ஆழிசூழ் உலகெலாம் பரதனேயாள நீ போய்த் 
தாழிரும் சடைகள் தாங்கிப் 
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி 
எழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றான் '

என்றாள் கைகேயி.

அங்கே பூழி சூழ்ந்த காடு. இங்கே புழுதி சூழ்ந்த கடற்கரை.


தன் திரு உருப் = தன்னுடைய உருவம்

பொருந்தவும் = பொருந்தவும். புழுதி மேல் எல்லாம் படிந்து, புழுதியும் அவனும் ஒன்றாக இருந்தது. 


புரைதீர் = குற்றம் அற்ற

பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பார். குற்றமற்ற நன்மை தரும் என்றால் பொய்யும் கூட உண்மை தான்.


வாழி வெங்கதிர்  =  வெம்மையான கதிர்

மணிமுகம் = மணி போல் ஒளி விடும் முகத்தை (இராமனின்)

வருடவும் = வருடிக் கொடுக்கவும்

வளர்ந்தான் = கிடந்தான்

ஊழி சென்றன ஒப்பு என = ஒரு ஊழிக் காலம் சென்றது போல சென்றன

ஒரு பகல் = ஒரு பகல்

அவை ஓர் = அப்படி ஒரு

ஏழு சென்றன = ஏழு பகல்கள் சென்றன

வந்திலன் = வரவில்லை

எறி கடற்கு இறைவன் = கடலின் தலைவனான வருணன்

மனைவியின் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை துன்பத்தை அவன் ஏற்றிருப்பான் ?

கடல் மணல் எவ்வளவு சுடும். அதில், ஏழு நாள் தர்ப்பைப் புல்லின் மேல் கிடந்தான்.

மனைவிக்கு ஒரு சின்ன உதவி செய்ய, கொஞ்சம் விட்டுக் கொடுக்க, யோசிக்கும் கணவர்கள் யோசிக்க ஒரு பாடல்.

No comments:

Post a Comment