Saturday, July 18, 2015

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும்

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும் 


இறைவனை எங்கெல்லாமோ தேடி திரிகிறோம். அவன் இப்படி இருப்பானா, அப்படி இருப்பானா என்று படம் வரைந்து, சிலை வடித்து அழகு பார்க்கிறோம்.

நாம் இறைவனைப் பற்றி அறிந்தது எல்லாம் மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதான். சொல்ல, படிக்கக் கேட்டதுதான்.

எல்லாம் இரவல் ஞானம். நம் சொந்த அனுபவம் என்று ஒன்று இல்லை.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் அப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று படித்ததை, கேட்டது கிளிப் பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாம் பிறப்பதற்கு முன்னால் ஏதேதோ நடந்ததாகச் சொல்கிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள், எல்லாம் இறைவன் அதைச் செய்தான், இதைச் செய்தான் என்று சொல்கின்றன.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.

"இறைவன் அங்கே நிற்கிறான், இங்கே இருக்கிறான், இங்கே கிடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் நடந்தது நான் பிறப்பதற்கு முன்னால் . நான் பிறந்தபின் , அதாவது என் அனுபவத்தில், நான் அறிந்தது என்னவென்றால்  இறைவன் இருப்பது என் மனத்துள்ளே என்பதைத்தான்"

பாடல்

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே.

சீர் பிரித்த பின்னே

நின்றது என் தந்தை ஊரகத்தில் இருந்தது என் தந்தை பாடகத்து
அன்று வெஃக அணை கிடந்தது எண்ணிலாத  முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே 

பொருள்


நின்றது  = நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை = என் தந்தை

ஊரகத்தில் = திருஊரகம் என்ற திருத் தலத்தில்

இருந்தது = அமர்ந்த கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை =என் தந்தை

பாடகத்து = பாடகம் என்ற திருத்தலத்தில்


அன்று = அன்று

வெஃக அணை கிடந்தது = திரு வெக்கா என்ற திருத்தலத்தில் சயன கோலத்தில் இருந்தது

எண்ணிலாத  முன்னெலாம் = எண்ணில் அடங்காத காலத்தின் முன்னம்

அன்று நான் பிறந்திலேன் = அன்று நான் பிறக்கவில்லை

பிறந்தபின் = பிறந்தபின்

மறந்திலேன் = மறந்து அறியேன்

நின்றதும் = நின்றதும்

இருந்ததும் = இருந்ததும்

கிடந்ததும் = கிடந்ததும்

என் நெஞ்சுளே = என் மனதிலே

மனதுக்குள் தேடுங்கள்.  அவன் அங்குதான் இருக்கிறான்.




1 comment:

  1. "நின்றதும் இருந்ததும் கிடந்ததும்" - இதே போல ஒரு பாடல் அபிராமி அந்தாதியில் உண்டல்லவா?

    ReplyDelete