Thursday, July 2, 2015

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன்

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன் 


சிந்தாமணி என்பது ஒரு உயரிய மணி வகையைச் சார்ந்தது. காமதேனு, கற்பக விருட்சம், என்பதனோடு சேர்த்து கொள்ளத் தக்கது இது. சீவகன் இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அவன் பெயரையும் சேர்த்து சீவக சிந்தாமணி என்று குறிப்பிடப்படுகிறது.

எழுதியவர் திருத்தக்க தேவர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டது.

இன்பச்சுவை (காமச் சுவை) சற்று அதிகமாக உள்ள காப்பியம். பின்னாளில், அநபாய சோழன் இதைப் படித்து, அந்த நூலின் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த போது அவனை மாற்ற தெய்வப் புலவர் சேக்கிழார் பெரிய புராணம் பாடியதாக வரலாறு.

அதில் இருந்து சில சுவையான பாடல்கள்....

கடல் பார்த்திருப்போம்.

நீண்ட கடற்கரை. அங்கங்கே சிறு சிறு மணல் குன்றுகள். அலை அடிக்கும் கரை. இவ்வளவுதானே ?

திருத்தக்க தேவருக்கு வேறு என்னவெல்லாமோ தோன்றுகிறது.

கடல் ஒரு காதலன் போலத் தெரிகிறது.

நுரை கொண்ட அலைகள் அவன் கழுத்தில் உள்ள மாலை போலத் தெரிகிறது.

அந்த மாலையை யார் போட்டது ?

கரை என்ற மங்கை. அங்கங்கே காணும் சிறு சிறு மணற்குன்றுகள் அவள் உடலில் உள்ள மேடு பள்ளங்கள் போலத் தெரிகிறது அவருக்கு.

பாடல்

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே
னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரை1 யெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே.

பொருள்

திரை பொரு = அலை பொருந்தும்

கனை கடற் = ஆராவாரம் மிக்க கடல்

செல்வன்  = என்னும் செல்வன்

சென்னிமேல் = தலையின் மேல்

நுரையெனு மாலையை = நுரை என்ற மாலையை

நுகரச் சூட்டுவான் = அவன் அனுபவிக்கும் படி சூட்டுவாள்

சரை1 யெனும் பெயருடைத் = சரை என்ற பெயருடைய

தடங்கொள் = மணல் மேடாகிய

வெம்முலைக் = அழகான மார்பு

குரை புனற் = ஒலிக்கும் நீராகிய

கன்னி = கன்னிப் பெண்

கொண் டிழிந்த தென்பவே. = கொண்டு வந்து சூட்டினாள்

என்ன ஒரு கற்பனை.

அடுத்த முறை கடற்கரையில் நிற்கும் போது , சீவக சிந்தாமணியை நினைக்க வேண்டும் !


1 comment:

  1. ஆகா, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஜொள்ளுப் பாடல்! இன்னும் "சீவக சிந்தாமணி" பாடல்கள் தருக.

    ReplyDelete