Sunday, July 5, 2015

திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல்

திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல் 


காதலனை பிரிந்து இருக்கும் போது, அவன் வந்தவுடன் என்ன பேசணும், எப்படி பேசணும், எப்படி ஊடுவது , எப்படி கூடுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள்.

ஆனால், அவன் வந்தவுடன் பேசும் வராது, நினைத்தது எல்லாம் மறந்து போகும்.

அந்த காதலும், காமமும் அப்படியே அவளை ஆக்ரமித்துக் கொள்கிறது.

என்ன செய்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள், தன் வசம் தான் இல்லை.

அப்படி காதலில், காமத்தில் கரையும் காதலிக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர்.

யாரும் எதிர்பார்க்க முடியாத உதாரணம்.

ஒரு முறை வள்ளுவர் சுடுகாட்டின் வழியே சென்றார். அங்கே ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. தீ அந்த பிணத்தை எரிக்கிறது. பிணத்தின் சதையெல்லாம் தீயில்  எரிகிறது. பிணமோ அது பற்றி ஒரு  கவலையும் இல்லாமல்  இருக்கிறது. ஒரு சிந்தனையும் இல்லை.

அது  போல,காமம் என்ற தீ பிடித்து சதையை உருக்கும் போது , புணர்வதும், ஊடுவதும் , பின் நிற்பதும் ஒன்றும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த உணர்ச்சியில் அவள் எரிகிறாள்.

பாடல்

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ 

புணர்ந்தூடி நிற்போ மெனல்.


சீர் பிரித்த பின்

நிணம் தீயில் இட்டதன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்து ஊடி நிற்போம் எனல் ?


பொருள்

நிணம் = சதை

தீயில் = தீயில்

இட்டதன்ன = போட்டது போல (பிணம் எரிவது போல )

நெஞ்சினார்க்கு உண்டோ  = ,காதல்  காம வயபட்ட்வர்களுக்கு உண்டோ

புணர்ந்து = கூடி

ஊடி = ஊடி

நிற்போம் எனல் ? = பின்  அமைதி பெற்று நிற்போம் என்று நினைக்கும் நினைவு

முதலில் கூடல்
பின் ஊடல்
பின் ஒன்றும் அறியாமல் நிற்கும் , தன்னை மறந்து நிற்கும் நிலை

காமத்தை, காதலை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்ன ?






1 comment:

  1. "காமத் தீ" என்பது பொருந்தும்படியான உதாரணம்!

    ஆனால், சுடுகாட்டில் எரியும் பிணத்திற்கு எந்த உணர்வும் இருக்காது. காமத் தீயில் எரியும் அவளும் கூடுதலில் ஒரு இன்பமும் கொள்ள மாட்டாளோ?!

    ReplyDelete