Wednesday, July 8, 2015

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம்

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம் 


வாழ் நாள் எல்லாம் எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

செல்வம், உறவு, அனுபவம் என்று எதையாவது சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு வீடு இருந்தால் இன்னொன்று. கொஞ்சம் பணம் இருந்தால் இன்னும் கொஞ்சம். இன்னும் கொஞ்சம் அனுபவம்...

மேலும் மேலும் சேர்ப்பது இன்பமா ?

 சரி,இன்பமாகவே  இருந்து விட்டுப் போகட்டும்.

இன்னொரு விதமான இன்பம் இருக்கிறது தெரியுமா ? அது இருப்பதை குறைப்பது. இது வேண்டாம், அது வேண்டாம் என்று இருப்பதை துறப்பதும் ஒரு இன்பம் என்கிறது அறநெறிச்சாரம்.

நமக்குத் தெரியாது அந்த இன்பம் எப்படி இருக்கும் என்று. முயன்று பார்க்கலாம்.

முதலில் நமக்கு தீமை தருபவைகளை .துறக்கலாம்...புகை பிடித்தல், மது, இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் என்று துறக்கலாம். இவற்றை கொள்வது சுகம்தான்  என்றாலும் துறத்தல் அதைவிட இன்பம்  பயக்கும்.

பாடல்

நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் 
இன்பத் தியல்பறி யாதார்.

சீர்  பிரித்த பின்

நீக்க அருநோய், மூப்பு, தலைப்பிரிவு, நல்குரவு,
சாக்காடு என்று ஐந்து  களிறு உழக்கப்--போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர்  துறந்து எய்தும்  
இன்பத்து இயல்பு அறியாதவர்.


பொருள் 

நீக்க அருநோய் = நீக்க முடியாத கடுமையான நோய்

மூப்பு = மூப்பு

தலைப்பிரிவு = நெருங்கிய உறவின் பிரிவு (மனைவி, கணவன், பிள்ளைகள்)

நல்குரவு = வறுமை

சாக்காடு = இறப்பு

என்று ஐந்து = என்ற ஐந்து

களிறு உழக்கப் = யானைகள் மிதித்து நசுக்க 

போக்க அரிய = வெளியேற முடியாத

துன்பத்துள் துன்பம் உழப்பர் = துன்பத்தில் கிடந்து வருந்துவர்

துறந்து எய்தும் = துறவினால் அடையும்
 
இன்பத்து இயல்பு அறியாதவர் =இன்பத்தின் இயல்பை அறியாதவர்கள்.

எதை எதை விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றினால் நமக்கு துன்பம் இல்லை. 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். (இந்தக் குறளில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன என்றால், இந்தக் குறளை படிக்கும் போது உதடு ஒட்டாது. நீங்குதல் என்று வந்தபின் உதடு மட்டும் ஒட்டுவானேன் என்று வள்ளுவர் அப்படி ஒரு குறளை எழுதி இருக்கிறார் )

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், எந்தத் துன்பமும் இல்லை. 

எல்லாவற்றையும் விட முடியுமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சிப்போம். எவ்வளவு விடுகிறோமோ அவ்வளவு சுகம். 


1 comment:

  1. அனைத்தையும் விட்டுவிட்டு சிவசிவா என்று இருப்பதும் ஒருவகையில் தன்னலமில்லையா?

    ReplyDelete