Friday, August 14, 2015

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2

இராமாயணம் - நின்னும் நல்லன் - பரதன் 2


கைகேயின் சூழ்ச்சியால், பரதனுக்கு பட்டம் என்றும் இராமனுக்கு கானகம் என்றும் தசரதன் வரம் தந்து விடுகிறான்.

இதை, தாய் கோசலையிடம் வந்து இராமன் சொல்கிறான்.

அதைக் கேட்ட கோசலை கூறுகிறாள்

"மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது ஒரு சரியான முறை இல்லை. அதை விட்டு விட்டுப் பார்த்தால், பரதன்  நிறைந்த குண நலன்கள் உடையவன்.  இராமா, உன்னை விட நல்லவன் "


அப்படி கூறியவள் யார் ?

நான்கு பிள்ளைகளிடமும் குற்றம் இல்லாத அன்பை செலுத்தும் கோசலை.

அப்படி சொன்னதின் மூலம், அவர்களுக்குள் உள்ள வேற்றுமையை மாற்றினாள் என்கிறான் கம்பன்.

பாடல்

‘முறைமை அன்று என்பது ஒன்று
     உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
     நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
     கூறினள் - நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
     வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

‘முறைமை அன்று = சரியான அரச தர்மம் இல்லை

என்பது = என்ற

ஒன்று உண்டு = ஒரு சிக்கல் இருக்கிறது

மும்மையின் நிறை குணத்தவன் = மூன்று மடங்கு உயர்ந்த குணம் உள்ளவன்; அல்லது மூன்று பேரை விட உயர்ந்த குணம் உள்ளவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்’ = ஒரு குறையும் இல்லாதவன்

எனக்      கூறினள் = என்று கூறினாள்

நால்வர்க்கும் =நான்கு பிள்ளைகளிடமும்

மறு இல் அன்பினில்  = குற்றம் இல்லாத அன்பினால்

வேற்றுமை மாற்றினாள். = அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை மாற்றினாள்

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நம் வீட்டில் சில சமயம், நம் பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று சோர்ந்து வரலாம், விளையாட்டில் அல்லது வேறு ஏதாவது போட்டியில் பங்கெடுத்து பரிசு எதுவும் பெறாமல் வரலாம், நமக்கு மிகுந்த எதிர்பார்ப்பு  இருந்திருக்கும். அவர்களும் ஆசையோடு இருந்திருப்பார்கள். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.

மதிப்பெண் cut off வை விட குறைவாக வந்திருக்கும்.

பொதுவாக என்ன நடக்கும் "நான் அப்பவே சொன்னேன், எங்க ஒழுங்கா படிக்கிற? எந்நேரமும் tv , இல்லேனா cell phone" என்று பிள்ளைகளை குறை கூறுவோம்.

"நீ ஒண்ணுக்கும் லாயக்கு இல்லை, மாடு மேய்க்கத் தான் லாயக்கு " என்று திட்டுவதும் சில வீடுகளில் நிகழ்வது உண்டு.

நினைத்தது நடக்காமல் பிள்ளை சோர்ந்து வரும்போது, ஒரு தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கோசலை பாடம் நடத்துகிறாள் ....

இந்த பாடல் நிகழ்ந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்.

சகரவர்தியாக முடி சூட்டப் போனவன், அது இல்லை என்று வந்து நிற்கிறான். அது மட்டும் அல்ல, 14 ஆண்டுகள் கானகம் வேறு போக வேண்டும் என்று கட்டளை வேறு.

கோசலை என்ன சொல்லுகிறாள்...

"பரவாயில்லடா....அரச முறை என்று ஒன்று உள்ளது, அதைத் தவிர்த்துப் பார்த்தாள் பரதன் உன்னை விட நல்லவன் அரசை அவனுக்கே தரலாம் " என்று இராமனை தேறுதல் செய்கிறாள்.

பிள்ளைகள் தோல்வி அடைந்து வந்தால் திட்டாதீர்கள்.அவர்களுக்கு தேறுதல் சொல்லுங்கள். வாழ்கை மிக நீண்டது. ஒரு தோல்வி வாழ்வை தீர்மானித்து விடாது.

அடுத்தது,

பரதன் இதுவரை சாதித்தது என்ன  ? ஒன்றும் இல்லை.

இருந்தும் கோசலை சொல்கிறாள் "நின்னினும் நல்லன்" என்று. பரதன்  இராமனை விட   உயர்ந்து நிற்கிறான்.

எப்படி அவன் உயர்ந்தான் ?

பார்ப்போம்...



1 comment:

  1. இது சரியான உதாரணம் இல்லை. இராமனின் செயலால் அவன் அரச பதவியை இழக்கவில்லை. அப்போது அவனை எப்படித் திட்ட முடியும்?

    "இந்த மாதிரி செய்வது முறைமை அல்ல. இருந்தாலும், பரதன் மிகவும் நல்லவன்" என்று சொல்லி, இராமனுக்குக் கோபம் இருந்திருக்குமானால் அதை மாற்ற முயற்சி செய்தாள் கோசலை.

    ReplyDelete