Tuesday, August 25, 2015

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2

இராமாயணம் - போக்கினேன், ஆக்கினேன் - பாகம் 2 


"என்னது என் தந்தை தசரதன் இறந்து போனானா? என் அண்ணன் கானகம் போனானா ? ஏன் ? எப்படி நடந்தது இது ?" என்று அதிர்ச்சி அடைந்த  பரதன் கைகேயிடம் கேட்டான்.

அதற்கு கைகேயி

தசரதனை "அவன்" என்று குறிப்பிடுகிறாள்.

"அவன் தந்த இரண்டு வரத்தினால் இராமனை கட்டுக்கு அனுப்பினேன், உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன், அது பொறுக்காமல் அவன் உயிரை விட்டு விட்டான்"

என்று ஏதோ தன் பேரில் ஒரு குற்றமும் இல்லாத மாதிரி  மிகச் சாதரணமாக சொல்லி முடிக்கிறாள்.

பாடல்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து’ என்றாள்.

  பொருள்

‘வாக்கினால் வரம் தரக் கொண்டு = தசரதன் முன்பு வரம் தந்தான். அதை, நிறைவேற்றுவதாக இப்போது வாக்கு தந்தான். அதன்  மூலம்

மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; = இராமனை காட்டுக்கு அனுப்பினேன்

போக்கி = அனுப்பி விட்டு

பார் உனக்கு ஆக்கினேன்; = இந்த உலகை உனக்கென்று ஆக்கினேன்

அவன் = தசரதன்

அது பொறுக்கலாமையால் = அதைப் பொறுக்காமல்

நீக்கினான் தன் உயிர் = உயிரை விட்டு விட்டான்

நேமி வேந்து’ என்றாள் = அதிகார சக்ரத்தை  செலுத்தும் அரசன் என்றாள்

இந்த பாட்டில் நிறைய ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

அவற்றை நாளை பார்ப்போம்.

============== பாகம் 2 =================================================

கைகேயி  மிக நல்லவள். இராமனை தன் மகனாக நினைத்து வளர்த்தவள்.  கூனியின் வார்த்தைகளை கேட்டு தலைகீழாக மாறினாள்.

நம் எல்லோருக்குள்ளும் நல்லதும் கெட்டதும் கலந்து கிடக்கிறது.

நல்லதைப் படித்து, நல்லவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்குள் இருக்கும் நல்லவைகள் சுடர் விட்டு எழும்.

கெட்டவர்களோடு சேர்ந்து, கெட்டதைப் படித்தால் கெட்டவைகளே மேலெழுந்து நிற்கும்.

கைகேயி , கூனியொடு சேர்ந்தாள். அவளுக்குள் கிடந்த சாத்தான் உயிர் பெற்றெழுந்தான்.

அவள் பேச்சில் ஆணவம் சொட்டுகிறது....

மைந்தனைப் போக்கினேன்
பார் உனக்கு ஆக்கினேன்

என்று தான் செய்ததாகக் கூறுகிறாள்.

இராமன் வனம் போனான்.  தசரதன் வானம் போனான்.

காரணம் என்ன ?

கைகேயி சொல்கிறாள், "என் பேரில் என்ன தப்பு...நான் ஒரு தவறும் செய்யவில்லை"....

அவன் வரம் தந்தான்

அவன், அந்த வரங்களை நிறைவேற்றுவதாக வாக்கு தந்தான் ....இது தசரதனின் பிழை. என் மேல் ஒரு குற்றமும் இல்லை என்பது போல பேசுகிறாள்.


கூனியின் நட்பு அவளை அப்படி பேச வைத்தது...

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
   தீயார்சொற் கேட்பதுவுந் தீதே-தீயார்
   குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
   டிணங்கி யிருப்பதுவுந் தீது.

தீயாரோடு இணங்கி இருந்தாள். தீயவளாகிப் போனாள்.

அப்போது கூட, அவளின் அடிப்படை நல்ல குணம் போகவில்லை.

இராமனை போக்கினேன் என்று கூறவில்லை.

"மைந்தனைப் போக்கினேன்" என்று கூறுகிறாள்.  அப்போதும் , இராமன் மேல் உள்ள பாசம் போகவில்லை.

மகனே மகனே என்று சொல்லி வளர்ந்த நாக்கு  தவறியும் மாற்றிச் சொல்லவில்லை.

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் கூறியது போல...கைகேயியின் நாக்கு, இராமனை கானகம் அனுப்பிய பின்னும், "மைந்தன்" என்றே கூறியது.

நல்லதை பழக்கப் படுத்தி வையுங்கள். அது உங்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும்.

 சரி,இதைக் கேட்டவுடன் பரதன் என்ன செய்தான் ?









1 comment:

  1. கணவன் இறந்ததை, சும்மா விளையாட்டுப் பேச்சுப் பேசுவது போலச் சொல்கிறாளே! கொஞ்சம் கூட கணவனை நினைத்து வருத்தம் இல்லையா?!

    ReplyDelete