Saturday, August 15, 2015

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3

இராமாயணம் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ? - பரதன் 3 


நின்னும் நல்லன் என்று கோசலை , இராமனிடம், பரதனைப் பற்றிச் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

கோசலை பரதனின் பெரியம்மா. அவள் அப்படி பாராட்டியது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை நாம் நினைக்கலாம்.

பரதனை முன் பின் பார்த்திராத குகன் சொல்லுகிறான் "தாயின் வரத்தினால் தந்தை வழங்கிய உலகை "தீ வினை" என்று விலக்கி , நீ இங்கு வந்த தன்மை நோக்கினால், ஆயிரம் இராமர்களை சேர்த்தாலும் உன்னோடு ஒப்பிட முடியாது "

பாடல்

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய
     தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
     சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
     தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
     தெரியன் அம்மா!

பொருள்

‘தாய் உரைகொண்டு = தாயின் வரத்தினால்

தாதை உதவிய = தந்தை கொடுத்த

தரணி தன்னை,= இந்த உலகை

‘‘தீவினை” என்ன நீத்து = தீவினை என்று விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கி = யோசனையை முகத்தில் தேக்கி

போயினை என்றபோழ்து, = சென்றாய் என்ற பொழுது

புகழினோய்! = புகழ் உடையவனே

தன்மை கண்டால், = உன் தன்மையைப் பார்த்தால்

ஆயிரம் இராமர்= ஆயிரம்  இராமர்கள்

நின் கேழ் ஆவரோ, = உனக்கு உவையாவரொ ?

 தெரியன் அம்மா! = எனக்குத் தெரியவில்லை

இதில் குகன் என்ன சிறப்பை கண்டு விட்டான் ? தனக்கு உரிமை இல்லாத ஒன்றை உரியவனிடம் ஒப்படைப்பது என்ன அவ்வளவு பெரிய நல்ல குணமா ?

அது பெரிய குணம், ஆயிரம் இராமர்கள் அந்த குணத்திற்கு ஈடாக மாட்டார்கள் என்று   சொன்னால், அது ஏதோ இராமனை குறைத்து மதிப்பீடு செய்வது போல உள்ளது அல்லவா ?

பரதனில் அப்படி என்ன சிறப்பு ?

பார்ப்போம்


No comments:

Post a Comment