Monday, August 10, 2015

இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே

இராமாயணம் - உன் பிள்ளைக்கு வரும் நல்லததைத் தடுக்காதே 


என் வேள்வியைக் காக்க உன் மகன் இராமனை எனக்கு துணையாக அனுப்பு என்று விசுவாமித்திரன் தசரதனிடம் கேட்டான்.

"அவன் சின்னப் பிள்ளை, போர் தந்திரங்கள் அறியாதவன், நானே வருகிறேன்" என்றான் தசரதன்.

நம் வாழ்விலும் இந்த மாதிரி சந்தர்பங்கள் வரும். பிள்ளையை வெளி நாடு அனுப்பி படிக்க வைக்க வேண்டும், பெண்ணை அயல் நாட்டில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சிக்கல்கள் வரும் போது நாம் பயப்படுவோம். என்னத்துக்கு risk என்று உள்ளூரிலேயே ஒரு கல்லூரியிலேயோ, அல்லது ஒரு வரனையோ பார்த்து முடித்து விடுவோம்.

மற்றவர்களிடம் யோசனை கேட்கலாம். ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். அதில் எவன் நல்லவன், எவன் , நாம் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கட்டும் என்று நினைப்பவன் என்று தெரியாது.

எனவே தான்,  அந்தக் காலத்தில் மன்னர்கள் கற்ற துறவிகளை எப்போதும் அருகில் வைத்து இருந்தார்கள். மன்னர்கள் கேட்காத போதும் அவர்கள் நல்லதையே எடுத்துச் சொன்னார்கள்.

விச்வாமித்ரரை பார்த்து வசிட்டன் சொன்னான் "நீ இதை பொறுத்துக் கொள்" . தசரதன் பிள்ளைப் பாசத்தில் ஏதோ சொல்கிறான். நீ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்லி விட்டு.

தசரதனைப் பார்த்து , "உன் மகனுக்கு அளவிட முடியாத நன்மைகள் வரப் போகிறது. அதை ஏன் நீ தடுக்கிறாய் " என்று கூறினான்.


பாடல்


கறுத்த மா முனி கருத்தை உன்னி ‘நீ
பொறுத்தி’ என்று அவன் புகன்று ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ? ‘எனா வசிட்டன் கூறினான்.

பொருள்

கறுத்த மா முனி = கோபத்தால் முகம் கறுத்த விஸ்வாமித்திரனின்

கருத்தை உன்னி  = கருத்தை எண்ணி

‘நீ பொறுத்தி’ என்று அவன் புகன்று = நீ இதை பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி

‘நின் மகற்கு = உன் மகனுக்கு

உறுத்தல் ஆகலா = எல்லை அற்ற

உறுதி = நன்மைகள்

எய்தும் நாள் = அடையும் நாள்

மறுத்தியோ?  = மறுப்பாயா ?

‘எனா வசிட்டன் கூறினான். = என்று வசிட்டன் கூறினான்

வசிட்டன் போல படித்த, உங்கள் நலனில் அக்கறை உள்ள எத்தனை பேர் உங்களுக்கு  அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள் ?

அப்படி நீங்கள் எத்தனை பேருக்கு இருக்கிறீர்கள் ?


படித்த நல்லவர்களை எப்போதும் உடன் வைத்து இருங்கள். அதற்கு இணையான செல்வம்  எதுவும் கிடையாது. 

பின்னாளில் , இராமன் முடி சூட்டும் நாள் குறித்த பின், வசிட்டன் சில புத்திமதிகளை  இராமனுக்குச் சொல்வான். அதில் முதல் அறிவுரை "படித்த நல்லவர்களை  உடன் வைத்துக் கொள்" என்பதுதான். 

இன்று வரை இல்லாவிட்டாலும், இனியேனும் கண்டு பிடியுங்கள்.

அப்படி ஒருவராக நீங்களும் இருக்க முயற்சி செய்யுங்கள். 


No comments:

Post a Comment