Monday, August 17, 2015

திருவாசகம் - நீ செய்தது சரிதான்

திருவாசகம் - நீ செய்தது சரிதான் 


நமக்கு வாழ்க்கையில் எவ்வளவோ நல்லவை கிடைதிருகின்றன.

நல்ல நாடு - போர் இல்லாத நாடு, மக்களாட்சி உள்ள நாடு, அதிகம் இல்லாவிட்டாலும் போதுமான அடிப்படை வசதிகள் உள்ள நாடு...

நல்ல பெற்றோர், பிள்ளைகள், கணவன் அல்லது மனைவி, அருமையான பிள்ளைகள், சுகமான சூழ்நிலை, நல்ல படிப்பு, தகுதிக்கு தக்க வேலை என்று எவ்வளவோ நல்லது நமக்கு கிடைத்திருக்கிறது.

இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் ? என்ன சாதித்து இருக்கிறோம்.

உண்பதும், உடுத்துவதும், சில பல இன்பங்களை தூய்பதுமாய் வாழ்நாள் கழிந்து கொண்டிருகிறது.

மாணிக்க வாசகர் உருகுகிறார்.....

எனக்கு என்னவெல்லாம் நடந்ததோ, அது எனக்கு வேண்டியதுதான். நான் மீண்டும் பிறந்தது, சரிதான்.  கிடைத்தற்கரிய இந்த பிறவி கிடைத்த பின்னும், என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? பெண்ணின் துடிக்கும் உதடுகளையும், அவளின் நெகிழ்ந்து விலகிக் கிடக்கும் உடைகளையும், அவள் முகத்தில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளையும் பார்த்து இரசித்துக் கொண்டு என் காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறேன்....எனக்கு நல்லது எங்கே நடக்கப் போகிறது.

என்னை விட்டுவிட்டு, உன் அடியார்களுக்கு நீ அருள் தந்தாய், அதுவும் சரிதான்.

 பாடல்

முடித்தவாறும் என்றனக்கே தக்கதே, முன் அடியாரைப்
பிடித்தவாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்தவாறும் துகில் இறையே சோர்ந்தவாறும் முகம் குறுவேர்
பொடித்தவாறும் இவை உணர்ந்து கேடு என்றனக்கே சூழ்ந்தேனே!

 பொருள்

தக்கதே என்ற சொல்லை

"முடித்தவாறும் என்றனக்கே"

"முன் அடியாரைப் பிடித்தவாறும்"

என்ற இரண்டு தொடர்களுக்கும் பின்னால் சேர்த்து

முடித்தவாறும் என்றனக்கே  தக்கதே என்றும்

முன் அடியாரைப் பிடித்தவாறும் தக்கதே என்றும் படிக்க வேண்டும்.

முடித்தவாறும் என்றனக்கே = எனக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நீ நினைத்து முடித்து வைத்தாயோ

தக்கதே = அது சரியானதுதான்

முன் அடியாரைப் = முன்னால் அடியவர்களை

பிடித்தவாறும் = நீ சென்று பிடித்தவாறும் (தக்கதே)

சோராமல் = சோர்வில்லாமல், விடாமல்

சோரனேன் = சோரம் போன நான், கெட்டவனான நான்

இங்கு = இங்கு

ஒருத்தி = ஒருத்தி

வாய் துடித்தவாறும் = உதடுகள் துடிப்பதையும்

துகில் = உடை

இறையே = இரைந்து கிடப்பதும் (சிதறி கிடப்பதும்)

சோர்ந்தவாறும் = நெகிழ்ந்து (சோர்ந்து) கிடப்பதையும்

முகம் = முகத்தில்

குறுவேர் = சின்ன சின்ன வேர்வை

பொடித்தவாறும் = பொடிப் பொடியாக துளிர்பதையும்

இவை உணர்ந்து = இவற்றை உணர்ந்து

கேடு என்றனக்கே சூழ்ந்தேனே! = எனக்கு கேடே சூழ்ந்தது

சிற்றின்பத்தை மணிவாசகர் சொன்ன மாதிரி யார் சொன்னார்கள் !




1 comment:

  1. ஒரே பாடலில், "சூப்பர் ஜொள்ளு + அதன் கேடு சொல்லுதல்" என்று இரண்டும் அற்புதம். ஆகா!

    ReplyDelete