Saturday, August 29, 2015

இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன்

 இராமாயணம் - பழிக்கு அஞ்சிய பரதன் 


கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கு அரசு கிடைத்தது. ஆண்டு அனுபவிக்க வேண்டியதுதானே.

என்ன ஆகி விடும் ? சக்ரவர்த்தியை எதிர்த்து யார் என்ன சொல்ல முடியும் ?

பரதன் கவலைப் படுவது அவன் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்களைப் பற்றி அல்ல. பின்னாளில் வருபவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி வருந்துகிறான்.

முன்பொரு நாள் அரச குல தர்மத்தை பரதன் சிதைத்தான் என்று வருங்கால சந்ததி பேசுமே என்ற பழிக்கு அஞ்சினான்.

வள்ளுவர் சொல்லுவார்,

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

நல்ல பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம், சரியாக சுத்தப் படுத்தாத பாத்திரத்தில் இட்ட நல்ல பால் போன்றது என்று.

பாத்திரம் சரி இல்லை என்றால், பால் கெட்டுப்  போகும். அந்தப் பாலை உட்கொள்ள முடியாது.  அப்படியே உண்டாலும் அது உண்டவனுக்கு தீமை செய்யும்.  அது போல, பண்பில்லாதவன் பெற்ற செல்வத்தை அவனால் அனுபவிக்க  முடியாது, அப்படியே அனுபவித்தாலும் அது அவனுக்கு தீமையே செய்யும்.

தான் அந்த அரசை பெறுவது ஒரு பண்பில்லாத செயல் என்று எண்ணினான் பரதன்.

தான் வாழும் காலத்திற்கு மட்டும் அல்ல, இன்னும் வரும் காலத்தில் உள்ள மக்கள் என்ன நினைப்பார்களோ என்று பழிக்கு அஞ்சியவன் பரதன்.

பாடல்

‘ “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ?


பொருள்

‘ “சுழியுடைத் = கெட்ட எண்ணம் கொண்ட

தாயுடைக் = தாயின்

கொடிய சூழ்ச்சியால் = கொடிய சூழ்ச்சியால்

வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து = வழி வழியாக கட்டிக் காத்த மரபை கொன்று

ஒரு பழி உடைத்து ஆக்கினன் = ஒரு பழியை செய்தான்

பரதன் = பரதன்

பண்டு” = அந்தக் காலத்தில்

எனும் = என்ற

மொழி உடைத்து ஆக்கலின் = பழிச் சொல்லை ஆக்குவதைத் தவிர

முறைமை வேறு உண்டோ? = வேறு என்ன இருக்கிறது

அரசை ஆள்வதில் உள்ள சுகம் அவனுக்குத் தெரியவில்லை.

அதிக்கரம், செல்வம், பணம், பகட்டு, ஆள் , அம்பு, சேனை ஒன்றும் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

அதனால் வரும் பழி மட்டும் அவனுக்குத் தெரிகிறது.

மற்றவர்களாய் இருந்தால், சக்கரவர்த்தி பதவியின் சுகம் மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கொஞ்சம் பழி வந்தால் என்ன, ஏதாவது சொல்லி  சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள்.

பரதன் இராமனை விட உயரக் காரணம், அவன் மனம் உயர்ந்ததனால். அவனுடைய பழிக்கு அஞ்சிய குணமும் அவன் மனம் உயர ஒரு காரணம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை மகிழ்விக்க, நாம் செய்யும் தவறை சுட்டி காட்டாமல்  போகலாம். நமக்கு கீழே இருப்பவர்கள், நமக்கு பயந்து நம் தவறுகளை  நமக்கு எடுத்துச் சொல்லாமல் போகலாம்.

நமக்குத் தெரிய வேண்டும்....நல்லது எது , கெட்டது எது என்று. அப்படி அறிந்து அதன் படி   நின்றதால் உயர்ந்தான் பரதன்.



No comments:

Post a Comment