Thursday, September 24, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1



தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றது சரியா ?

வாலியை மறைந்து நின்று கொன்றது சரியா ?


அன்று தொட்டு இன்று வரை இந்த சர்ச்சை நடந்து கொண்டேதான் இருக்கிறது.  எத்தனை முறை முடிவுகளை எட்டினாலும், ஒரு திருப்தி இல்லை.

இராமன் ஏன் அப்படிச் செய்தான் ? இராமன் அப்படி செய்யலாமா ? இது ஒரு தவறு இல்லையா ? இராமன் செய்தான் என்பதால் அது சரியாகி விடுமா ? இராமன் வழியில் செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு தடை இல்லையா ?

தாடகை, அவள் எவ்வளவுதான் பெரிய அரக்கியாக இருந்தாலும், அவள் பெண் தானே. ஒரு பெண்ணைக் கொல்வது அறமாகுமா ?

வாலி, எல்லா விதத்திலும் சுக்ரீவனை விட உயர்ந்தவன். பின் எதற்காக அவனைப் பகைத்து சுக்ரீவன் கூட நட்பு பாராட்டினான். சரி, அது வேண்டுமானால் எப்படியோ போகட்டும், மறைந்து நின்று தாக்கலாமா ?

இவை இரண்டும் அறத்தின்பாற்பட்டு நில்லாத செயலாகவே தோன்றுகிறது.


தாடகையை கொன்றது, வாலியை மறைந்து நின்று கொன்றதற்கு முன்னால் இராமன் செய்த இன்னொரு தவறும் கூட இருக்கிறது.

அப்பா சொன்னார் என்பதற்காக கடமையை விட்டு விடுவதா ? நாட்டு மக்களை காக்கும் கடமை இராமனுக்கு இல்லையா ? தந்தை சொன்னார் என்பதற்காக கடமையில் இருந்து நழுவலாமா ?


அவை அப்படியே இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.

இப்போது, இன்னொரு கேள்வியை எடுப்போம்.

ஒன்றுக்கு ஒன்று முரணான அறங்கள் இருந்தால் எதை கையில் எடுப்பது. ஒன்றைச் செய்தால் மன்றொன்று அடிபட்டுப் போகும்.

உதாரணமாக,

ஒருவன் மது போதையில், ஒரு பெண்ணை துரத்தி வருகிறான். அவன் கையில் அவள் அகப்பட்டால் அவள் கற்பு பறிபோவது திண்ணம். அவளை கொலை கூட செய்து விடுவான். அந்தப் பெண் ஓடிவந்து உங்கள் கண் எதிரிலேயே ஒரு இடத்தில் மறைந்து கொள்கிறாள்.  போதையில் வந்த அந்த ஆள் , அந்தப் பெண் எங்கே என்று கேட்கிறான்.

நீங்கள் என்ன செய்வீர்கள் ?

பொய் சொல்வது அறத்தின் பாற்பட்ட செயல் அல்ல.

உண்மை சொன்னால், அந்த பெண்ணின் மானமும் உயிரும் போகும்.

என்ன செய்வீர்கள் ?

வள்ளுவர் சொன்னார் , பொய்மையும் வாய்மை இடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று.

ஒரு வேளை நீங்கள் உண்மை சொல்லி, அந்த மனிதன் அந்தப் பெண்ணை கெடுத்து கொலையும்  செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீதி அவனை  தூக்கில் போடும்.

அப்போதும் அந்த மனிதன் என்ன சொல்லுவான் "நான்தான் குடி வெறியில் இருந்தேன் என்று தெரியும் தானே உனக்கு...எதற்காக அந்தப் பெண்ணை காட்டிக் கொடுத்தாய் ...இப்போது பார் ...நீ சொன்ன உண்மையால் இரண்டு உயிர்கள் போகப் போகின்றன ..." என்று.

பொய் சொல்வது அறம் அல்லதான். இருந்தும் எல்லோரும் அந்த இடத்தில் பொய் தான் சொல்லி இருப்பார்கள்.

சரி, இது ஒரு வாதம்.

இன்னொன்றைப் பார்ப்போம்.

அறம் என்பது முடிந்த முடிவா ? இது தான் அறம் என்று யாராவது இறுதியாகக் கூற முடியுமா ?

கொல்வது பாவம் தான். ஆனால் ஊரில் பல பேரை கொன்றவனை நீதி தூக்கில் போடுகிறது. அது பாவம் இல்லையா ? நாடுகளுக்கு இடையே சண்டை வரும் போது  ஒரு நாட்டின் இராணுவம் இன்னொரு நாட்டின் இராணுவத்தில் உள்ளவர்களை கொல்கிறது . அது பாவம் இல்லையா ?

போதைப் பொருள்களை உட்கொள்ளுவது பாவம் தான். அறம் இல்லை தான். ஆனால், தாங்க முடியாத வலியில் ஒருவன் துடிக்கும் போது அவனுக்கு சிறிது போதைப் பொருளை மருந்து போல கொடுத்து அவன் வலியை தணிப்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை.

அறம் என்பது முழுவதுமாக வரையறுக்கப் பட்டது அல்ல. அது காலம், இடம், பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும்.

மீண்டும் இராமனிடம் வருவோம்....







1 comment:

  1. One more black mark is also there on Ram He was very very unfair to Sita. Agni pariksha and sending her to forest when she was pregnant are two most powerful in forgivable things that he did. She was the queen carrying thevraja varisu. How can he dovthat? Pls clarify this also. Maybe I can fell peace. Please

    ReplyDelete