Saturday, September 19, 2015

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே


2 comments:

  1. "இது என் அன்பன்" என்று முருகன் சொன்னால் பின் என்ன நடக்கும்? இறப்பு நம்மை விட்டுப் போய் விடுமா?

    ReplyDelete
    Replies
    1. வீடுபேறு கிடைக்கும்

      Delete