Saturday, September 19, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே 


பெரிய பெரிய மகான்கள் தோன்றிய பூமி  இது.எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்களிடம் இருந்து அந்த நல்ல விஷயங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அதை சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லாமல் போனால் அந்த பெரிய உண்மைகள் நாளடைவில் மறைந்து போகும். அது மட்டும்  அல்ல,அதை கண்டு சொன்ன அந்த மகான்களின் பேரும் பெருமையும் மறைந்து போகும்.

தான் கற்ற திவ்ய மந்திரங்களை எல்லோரும் உய்ய ஊருக்கே சொன்னவர் இராமானுஜர்.

அதனால், அதை பெற்றவர்கள்  வாழ்ந்தார்கள்.

அந்த உண்மைகள் நிலைத்தன.

அந்த மந்திரங்களை கண்டு சொன்ன பெரியவர்களின் பெயரும் நிலைத்தது.

அப்பேற்பட்ட மகான் இராமானுஜர். அவரின் பாதார விந்தங்களைச் சேர அவருடைய நாமங்களைச் சொல்லுவோம்.

பாடல்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


பொருள்

(மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.  இந்த பாசுரத்தில் பல இடத்தில் மன்னு என்ற வார்த்தை  வருகிறது. மன்னு புகழ் கோசலை மணி வயிறு வாய்த்தவன் )


பூமன்னு = பூவில் நிலைத்து வாசம் செய்யும்

மாது = திருமகள்

பொருந்திய  மார்பன் = பொருத்தமாக வந்து சேர்ந்த மார்பை உடையவன்

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நிலைத்து நிற்கும் பாடல்களை தந்த

மாறன்  = நம்மாழ்வார்

அடிபணிந் துய்ந் தவன் = திருவடிகளை பணிந்து உயர்ந்தவன்

பல்கலையோர் = பல கலைகளை கற்ற பெரியோர்

தாம்மன்ன = அவர்கள் நிலைத்து நிற்க

வந்த = வந்த

இராம னுசன் = இராமானுசன்

சர ணாரவிந்தம் = திருவடித் தாமரைகளை

நாம்மன்னி = நாம் என்றும் நிலையாக அடைந்து

வாழநெஞ்சே!  = வாழ்வதற்கு நெஞ்சே

சொல்லுவோம்  = சொல்லுவோம்

அவன் நாமங்களே = அவனுடைய நாமாங்களையே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்ன மாதிரி ,

இராமானுஜர் திருவடிகளை அடைய அவருடைய நாமங்களே துணை



1 comment:

  1. solluvom avan namangale.Emberumanar thiruvdigale saranam.

    ReplyDelete