Saturday, September 26, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி 


நம் மனம் நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் அமைதியாக இரு என்றால் இருக்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும்.

மனதை கட்டுப் படுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை.

மனம் இருப்பதால்தானே மனிதன் !

பெரிய பெரிய மகான்கள் எல்லாம் ரொம்ப பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள்.

மனம் , அது தன் பாட்டுக்கு  வேலை செய்கிறது. அதனால் தான்  நம்மாழ்வார் முதலிலேயே தன் மனதுக்கு சொல்லி விடுகிறார்...அவனை தொழுது எழு என்  மனமே என்று

உடனே மனம் கேட்கும்,  எதற்கு அவனை நான்  தொழ வேண்டும் என்று ? அவன் என்ன அப்படி என்ன பெரிய ஆளா என்று ?

மனதுக்கு சமாதனம் சொல்கிறார்....அவன் யார் தெரியுமா ...

அதற்கு மேல் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த நலன்களை  கொண்டவன், மயக்கம் இல்லாத மதி நலம் தருபவன் அவன், அமரர்களுக்கு அவன் அதிபதி, நம்  துன்பங்களை எல்லாம் போக்குபவன் அவன்..எனவே அவனை தொழுது ஏழு என் மனமே "

என்று மனதுக்கு சொல்கிறார்.

" உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் 
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "


இங்கே, திருவரங்கதமுதனார், இராமானுஜரைப் பற்றி கூறும் போது ,

"என் மனமே, உன்னை நான் அடி பணிகின்றேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களின் தொடர்பை விடுத்து, இராமானுசரிடம் அன்பு கொள்ளவோர் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு  "

பாடல்

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள்

பேரியல்நெஞ்சே!  = பெரிய மனமே

அடி பணிந்தேனுன்னைப் = உன்னை அடி பணிந்தேன்

பேய்ப் பிறவிப் = பேய் போன்ற பிறவி கொண்ட

பூரிய ரோடுள்ள = மக்களோடு உள்ள

சுற்றம் புலத்திப்  = உறவை நீக்கி

பொருவருஞ்சீர் = ஒப்பற்ற குணங்கள் உடைய

ஆரியன்= ஆரியன்

செம்மை = சிறந்த

இராமானுச = இராமானுசன்

முனிக் கன்பு செய்யும் = முனிவனுக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடை யார் = சீரிய பேறு உடையவர்கள்

அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே = அடிக்கு கீழ் என்னை சேர்ததற்கே.



No comments:

Post a Comment