Thursday, October 15, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....


=============== பாகம் 3 ========================================

நல்லது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 
தீயது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 

எப்படி ஆயினும், அனுபவித்தது போக, மீதி பழ வினையாக மீண்டும் வந்து சேரும். 

பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

செயல்களின் மேல் பற்று இல்லாமல் அந்த செயல்களை செய்தால் அவற்றின் பாவ  புண்ணியங்கள் நம்மைச் சேராது என்கிறான் கண்ணன் கீதையில். 

तस्मादसक्त: सततं कार्यं कर्म समाचर |
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुष: || 19||

tasmād asaktaḥ satataṁ kāryaṁ karma samāchara
asakto hyācharan karma param āpnoti pūruṣhaḥ

tasmād = எனவே 

asaktaḥ = பற்று இல்லாமல் 

satataṁ = சதா சர்வ காலமும் 

kāryaṁ = கடமைகளை 

karma =செயல்பட்டு 

samāchara = வந்தால் 

asakto = பற்றின்மை 

hy = நிச்சயமாக 

ācharan = செய்வது 

karma = வினை 

param āpnoti pūruṣhaḥ = பரம நிலையை அடைகிறான் அவன் 

காரியங்களின் மேல் பற்று இல்லாமல் செய்தால், அந்த காரியங்களின் பாவ புண்ணியங்கள்  உங்களைச் சேராது. 

இன்னும் ஒரு படி மேலே போவோம்...

இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனம் வந்து விட்டால் , செயல்களின் விளைவுகள் நம்மை பாதிக்காது.

இதைத்தான் சைவ சிந்தாந்தம் "இரு வினை ஒப்பு" என்கிறது. 

மாணிக்க வாசகர் சொல்லுவார் "என் வினை ஒத்த பின், வித்து மேல் விளையாமல், கணக்கில்லா திருக்கோலம் நீ வந்து காட்டினாய், திருக் கழுக்குன்றிலே" என்று. 


பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

நல்லது, கெட்டது 
பாவம் , புண்ணியம் 
உயர்ந்தது, தாழ்ந்தது 

என்ற இரு வினைகளும் ஒன்றான பின், பிறவி முடிந்தது என்கிறார்.

விதை இனி முளைக்காது , அது உலர்ந்து விட்டது. "உணக்கு இல்லாதது ஓர் வித்து "  

இதையே கீதையும் ஸ்தத ப்ரன்ஞன் என்கிறது. 

மனம் அங்கும் அலையாமல் நிலை பெற்று நிற்பது. 

இந்த பாடலுக்கு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...மற்ற பாடல்களையும் பார்க்க வேண்டி இருப்பதால், இங்கே நிறுத்திக் கொண்டு அடுத்த பாடலுக்கு போவோம்.




1 comment:

  1. நீ படைக்கும் தமிழ் விருந்துக்கு மிக நன்றி.
    ஆனால், இந்த மாதிரிக் கர்மாவை ஒப்புக்கொள்ள முடியாது!

    ReplyDelete