Sunday, November 15, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - எம்மை தீண்டாதீர் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 4

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - எம்மை தீண்டாதீர்  - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 4



திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.      

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....

====================== பாகம் 3 ==========================================

காமம், யாரை விட்டு வைத்தது ?

எல்லாம் படித்த பராச முனிவர் மச்சகந்தியிடம் மயங்கினார்

ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் அகலிகையிடம் மயங்கினான்

நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நா கொண்ட இராவணன் சீதையிடம் மயங்கினான்.

திருநீலகண்டர், படிப்பு அறிவு இல்லாதவர். ஏழை குடும்பத்தில் வந்தவர். இலட்சுமி போன்ற அழகான மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதானால், அவருடைய மனைவி அவர் மேல் கோபம் கொண்டார்.

வீட்டில் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தார்கள். அவருக்கு வேண்டிய எல்லாம்  அவருடைய மனைவி செய்வார். ஆனால், அவரை தொட விட மாட்டார். தனிப் படுக்கைதான்.

பாடல்

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.



பொருள்

ஆன தம்  = தனக்கு என்று ஆன

கேள்வர் = துணைவர்.  சேக்கிழார் தேர்ந்து எடுத்து சொற்களைப் போடுகிறார். கேள்வன் என்று இருந்திருக்க வேண்டும்.  கேள்வர் என்று பன்மையில் வருகிறது. மரியாதை நிமித்தம் என்றும் கொள்ளலாம். தன்னைத் தவிர மற்ற பெண்களுக்கும் உறவாக இருந்ததால் கேள்வர் என்று பன்மையில் கூறினார் என்றும் கொள்ளலாம்.


அங்கு = அந்த இடத்தில்

ஓர் பரத்தை பால் = ஒரு விலை மகளிடம்

அணைந்து = உடன் இருந்து

நண்ண = மீண்டும் மனை வர

மானமும் பொறாது = அவமானம் அடைந்து

வந்த ஊடலால் = அதில் வந்த ஊடலால்

மனையின் வாழ்க்கை = வீட்டு வாழ்க்கையில்

ஏனைய எல்லாம் செய்தே = மற்றது எல்லாம் செய்து. உணவு சமைத்துத் தருவார், ஆடைகள் எடுத்துத் தருவார்...

உடன் உறைவு இசையார் ஆனார் = கூடி இருப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

தேன் அலர் = தேன் சிந்தும்

கமலப் = தாமரைப்

போதில் = பூவில்

திருவினும் = திருமகளை விட

உருவம் மிக்கார். = அழகு உடைய அவர்

மனைவி இலட்சுமியை விட அழகானவராக இருந்தாலும்  விலை  மகளிடம்  அவருக்கு நாட்டம்.

காமம் யாரை விட்டது ?

தங்கச் சிலை போன்ற மனைவி அருகில்.

மனைவியை அவர் ஆசையுடன் நெருங்குகிறார். அவளின் ஊடலைத் தீர்த்து, அவளோடு கூட....

அவர் நினைத்தது ஒன்று...நடந்தது வேறு ஒன்று.....

================== பாகம் 4 =============================================

மனைவியின் ஊடலை தீர்க்க எண்ணி , மனைவியை அணைக்க அவள் அருகில்  நெருங்கினார்.

"என்னை ஒண்ணும் தொட வேண்டாம் " என்று சொல்ல நினைத்தார் அவரின் மனைவி.

உடனே அவள் மனதில் ஒரு சிந்தனை ஓடியது.

இவர் ஏற்கனவே பல பெண்களை நாடுபவர். இப்ப நாம வேறு "என்னைத் தொடாதே" என்று சொன்னால், சரிதான் இதுதான் சாக்கு என்று அந்த பெண்களின்  வீடே கதி என்று அங்கேயே போய் விடுவார்.

என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த பெண் ஒன்று சொன்னாள் ...

"என்னை மட்டும் அல்ல, நீர் வேறு எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது " என்று  ஆணையிட்டார்.

பாடல்

மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.

பொருள்

மூண்ட = தோன்றிய. தீ போல் மூண்ட

அப் புலவி = அந்த ஊடல்

தீர்க்க = தீர்க்க வேண்டி

அன்பனார் = திருநீல கண்ட நாயனார்

முன்பு சென்று = மனைவியின் முன் சென்று

பூண் தயங்கு = பூண் போன்ற அணிகலன்கள் அவளின் அழகின் முன் தயங்கி பின்னாலே போக

 இளமென் சாயல் = இளமையான மென்மையான

பொன் = பொன் போன்ற பொலிவுடன் கூடிய

கொடி = கொடி போன்ற

அனையார் தம்மை = அவரின் மனைவியை

வேண்டுவ இரந்து = அவளுக்கு என்ன வேண்டுமோ அவற்றை கேட்டு

கூறி = அதற்கு வேண்டியதை கூறி

மெய் உற அணையும் போதில் = அணைக்கப் போகும் போது

‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். = திருநீலகண்டத்தின் மீது ஆணை எம்மை தீண்டாதீர் என்றார்.


தீண்டுவீர் ஆயின் என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்றார்.

அடுத்து என்ன நடந்தது ?






2 comments:

  1. அடுத்து என்ன நடந்தது? சஸ்பென்ஸ் பொறுக்க முடியலையே!

    ReplyDelete
  2. I want all stories in periya puraanam in tamil

    ReplyDelete