Monday, November 23, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?

பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....

===================== பாகம் 2 ===========================================

மனித மனம் எப்போதும் எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே இருக்கும். எதையும் பற்றாமல் அதனால் இருக்க முடியாது. 

அதிலும், தீய குணங்களை எளிதில் பற்றிக் கொள்ளும். நல்ல குணங்களைப் பற்ற நாள் ஆகும். 

எனவே தான் பதியும், பாசமும் இருக்க, பசு எப்போதும் பாசத்தையே பற்றும், பதியை விட்டு விட்டு. 

பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னும் என்று சொல்ல்வார்கள். ஏன் மாத்திச் சொல்ல முடியவில்லை ? 

கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னும் என்று சொல்ல முடியாது. 

ஏன் ?

தீய பழக்கங்கள் எளிதில் வந்து விடும்.

அதனால் தான் அவ்வையார், 

தீயாரை காண்பதுவும் தீது என்றாள் 


தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயவர்களைக் பார்க்கக் கூட கூடாது என்கிறாள். பார்த்தால், கிட்ட வா என்பான். வந்தால் , "வா அப்படியே ஒரு டீ சாப்டுகிட்டே பேசலாம்" என்பான் . ஒன்றிலிருந்து ஒன்றாக பல தீய பழக்கங்கள் வந்து சேரும்.

தீயவன் , தீயவற்றில் காட்டும் ருசி ஒரு புறம். நம் மனம் தீயவற்றை எளிதாகப் பற்றி கொள்ளும் குணம் மறு புறம். 

மனம் எதயாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் இருக்கும்.

எனவே தான், பற்றை விடச் சொன்ன வள்ளுவர் கூட

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

திருநீலகண்டர் இறைவனைப் பற்றிக் கொண்டார்.  இறைவன் மேல் ஆணை என்று சொன்னவுடன், அவரால் காமத்தை விட முடிந்தது. 

அது மட்டும் அல்ல, மனைவியின் சொல்லை அவர் மதித்தார். "நீ யார் என்னை தடுப்பதற்கு ...நான் ஆம்பிளை எங்க வேண்டுமானாலும் போவேன் வருவேன் " என்று வீரம் பேசவில்லை. 

மனைவியின் சொல்லுக்கு மதிப்பு தரும் அந்த பண்பு எங்கிருந்து வந்தது. 

படித்து வரவில்லை. 

பக்தியினால் கூட வந்திருக்காது. பக்தி , மனைவி பேச்சை கேள் என்று சொல்லித் தருவது இல்லை. 

இறைவன் மேல் பக்தி வரும் போது , அப்படி பக்தி கொண்ட மற்ற நல்லவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு அவரை பண் படுத்தியது என்றுதான் கொள்ள வேண்டும். 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று


அப்படி இருந்தால் , ஏன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குப் போனார் என்ற கேள்வி வருகிறது அல்லவா ?  

சேக்கிழார் சொல்கிறார் "இளமை மீதுற...எளியர் ஆனார் " என்கிறார். உணர்ச்சி வசப்பட்டு, தன் வசம் இழந்து தவறு செய்தார் என்று ஒப்புக் கொள்கிறார் செய்கிறார். 

அதை பூசி மெழுகவில்லை. அந்த தவறான செயலுக்கு ஞாயம்  தேடவில்லை. 

தவறு செய்து விட்டார். அதை மனைவி கண்டித்தவுடன், உணர்ந்து மனைவியின் பேச்சைக் கேட்டு, அப்படியே நடந்தார்.

பக்தியின் உச்சம் தொட்டு காட்டுகிறார் சேக்கிழார்.

பக்தி, ஒரு படிக்காத பாமரனை, இந்த அளவுக்கு பக்குவப் படுத்தும் என்றால், மற்றவர்களை அது எந்த அளவுக்கு பண்படுத்தும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். 

இவர் அப்படி என்றால், அவரின் மனைவி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சேக்கிழார் அடுத்த பாடல் காட்டுகிறார். 













1 comment:

  1. எல்லாப் பெண்களையும் விட்டு நீங்க வேண்டுமா? ஆச்சரியமான கதைதான். மேலும் எழுதுக. நன்றி.

    ReplyDelete