Friday, January 22, 2016

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து 


அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே

இறந்த காலம் , கழிந்த காலங்கள் மனிதனின் தோள் மேல் பெரிய பாரமாக எப்போதும் அழுத்திக் கொண்டே இருக்கிறது.

செய்த தவறுகள், செய்யாமல் விட்ட நல்லவைகள், சொன்ன பொய்கள், தெரிந்த செய்த துரோகங்கள், சுயநலத்துக்காக செய்த செயல்கள், அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் மனிதனை துரத்திக் கொண்டே இருக்கின்றன.

இது ஒரு புறம்.

இன்னொரு புறம், பிறந்த வீடு, ஜாதி, நாடு, மதம், பெற்றார், உற்றார் , குலம் , கோத்திரம் என்று ஆயிரம் விஷயங்கள் மனிதனை அழுத்திக் கொண்டிருக்கின்றன. என்னால் அதைச் செய்ய முடியவில்லை காரணம்  என் குடும்பச்  சூழ்நிலை. முன்னேறியவர்கள் பட்டியலில் இருந்ததால் எனக்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை, தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் என் எண்ணமும் செயலும் இப்படி இருக்கிறது என்று பிறந்து வளர்ந்த சூழ்நிலை நம்மை பாதிக்கிறது.

இது இன்னொரு புறம்.

மூன்றாவது என்னவென்றால், பிறந்தது முதலே நம் பெற்றோரும், சமுதாயமும்,  பள்ளிக் கூடமும் சில விஷயங்களை நம் தலையில் ஏற்றி விடுகின்றன. இறைவன் என்றால் யார், இதில் உயர்ந்த இறைவன் யார், தாழ்ந்த இறைவன் யார், சமயப் பெரியார்கள், நல்லது, கெட்டது , அறம் , மறம் , பாவம் , புண்ணியம் என்று வண்டி வண்டியாக மண்டையில் திணித்து விடுகிறார்கள். சிறு வயதில் மூளைச் சலவை செய்யப் பட்டதால் நாம் அவற்றை உண்மை என்றே நம்புகிறோம். அவற்றைத் தாண்டி நம்மால் வர முடிவதில்லை.  அதைத் தவிர மற்றவை எல்லாம் பொய் என்றே நினைக்கத் தலைப் படுகிறோம்.

உண்மையை அறிய வேண்டும் என்றால், பழையன எல்லாவற்றையும் கட்டி தூக்கி எறிந்து விட வேண்டும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி சொன்ன மாதிரி, பழையன எல்லாவற்றையும் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, குழந்தையின் மனதோடு  உண்மையைத் தேட வேண்டும். 

"பண்டைக் குலத்தைத் தவிர்ந்து"

நீங்கள் யாராக இருந்தாலும் கவலை இல்லை. உங்கள் பழையனவற்றை விட்டு விட்டு வாருங்கள். இறைவன் முன் எல்லோரும் சமம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், படித்தவன், முட்டாள் என்ற பேதமும் கிடையாது.


மனிதனுக்கு பணமும் செல்வமும் வந்தால் புத்தி மாறிப் போய் விடுகிறது. எவ்வளவோ கஷ்டப் பட்டு தவம் செய்கிறான். நிறைய வரங்களைப் பெறுகிறான். அவற்றின் மூலம் செல்வமும் பதவியும் கிடைக்கிறது. சந்தோஷமாக இருக்க   வேண்டியது தானே ? பணமும் செல்வாக்கும் வந்த உடன், மற்றவர்களை இம்சிக்கத் தொடங்குகிறான். பேராசை மேலும் மேலும் வேண்டும் என்கிறது. இறைவனை யார் என்று கேட்க்கும் அகங்காரம் வருகிறது. இறைவனை நிந்திக்கிறான். அவன் அடியார்களை நிந்திக்கத் தலைப் படுகிறான். அழிகிறான்.

"அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த"


அகில உலகங்களுக்கும் அதிபதியான அசுரரை, இராக்கதரை, கொலை தொழில் செய்வோரை எடுத்து களைந்த.

அதிகாரமும், செல்வமும் அகங்காரத்தை கொடுக்கும். அகங்காரம் அறிவை மயக்கும். எனவே, பணமும், அதிகாரமும் வரும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எடுத்துக் களைந்தவன் யார் ?

இருடி கேசன். 

அது என்ன இருடிகேசன் ?

ரிஷி+ கேசன். ரிஷி என்பது தமிழில் இருடி என்று வந்தது. ரிஷிகளுக்கு எல்லாம் தலைவன். ரிஷிகள், முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களின் தலைவன்.

எனக்கு, உங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை இட்டு அழைத்தால் திரும்பிப் பார்ப்போம். இறைவனுக்கு என்ன பெயர் ? அவனுக்கு ஒரு பெயரும் இல்லை. அவனுக்கு ஒரு பெயரும் இல்லாவிட்டாலும், அவனை எப்படித் தான் அழைப்பது ? ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த பெயரில்  அழைக்கிறார்கள்.

"வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி:

வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்

திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! என்பார் மணிவாசகர்.

இப்போது முழு பாசுரத்தையும் பார்ப்போம்.


பாடல்

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே


சீர் பிரித்த பின் 

அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை 
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த  இருடீ கேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ 

பொருள்

அண்டக் குலத்துக்கு = அண்டங்களுக்கு எல்லாம்

அதி பதியாகி =அதிபதியாகி

அசுரர் = அசுரர்களை

இராக்கதரை  = இராகதர்களை

இண்டைக் குலத்தை = கொலைத் தொழிலில் ஈடு படுபவர்களை

எடுத்துக் களைந்த = களைந்து எடுத்த

இருடீ கேசன் தனக்கு = ரிஷிகளின் தலைவனுக்கு

தொண்டக் குலத்திலுள்ளீர் = தொண்டர்கள் குலத்தில் உள்ளவர்களே

வந்து = வந்து

அடி தொழுது = அடி தொழுது

ஆயிர நாமம்சொல்லி = ஆயிரம் நாமம் சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து = உங்கள் பழைய குலத்தினை மறந்து

பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று கூறுங்கள்







4 comments:

  1. இப்படிப் பதம் பிரித்து விளக்காவிட்டால், இதையெல்லாம் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை! நன்றி.

    ReplyDelete
  2. completely agree with Dilip...great work :) god bless you

    ReplyDelete
  3. completely agree with Dilip...great work :) god bless you

    ReplyDelete
  4. அருமையான விளக்கம். மிகுந்த பாராட்டுகள். உங்கள் சேவை இன்னும் தேவை.

    ReplyDelete