Wednesday, January 27, 2016

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நெய்யோடு கூடிய சோறு, தினமும், அரசாங்கத்தில் பெரிய வேலையும், தாம்பூலமும், கழுத்துக்கும், காதுக்கும்  அணியும் ஆபரணங்களும், உடம்பில் பூசிக் கொள்ள நல்ல சந்தனமும் தந்து என்னை நல்லவானாக்கிய, படம் எடுத்து ஆடும் பாம்பின் எதிரியான கருடனைக் கொடியாகக் கொண்டவனை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

இதில் என்ன இருக்கிறது ? பெருமாள் எனக்கு எல்லா சௌகரியங்களும் செய்து தந்து இருக்கிறார், நான் அவரை அவரை வாழ்த்துகிறேன் என்று சொல்கிறார்.

சரி. இதில் நமக்கு என்ன செய்தி இருக்கிறது ? இதன் ஆழ்ந்த அர்த்தம் என்ன ?

நாம் இறைவனை எப்போது சிந்திப்போம் ?

நமக்கு ஏதாவது துன்பம் வந்தால், ஆபத்து வந்தால், சிக்கல் வந்தால் , துக்கம் வந்தால் இறைவனை  நினைப்போம். அவனிடம் வேண்டிக் கொள்வோம்.

சந்தோஷம் வந்தால் எப்போவாவது இறைவனை நினைப்போமா ? ஏதோ எல்லாம் நாமே சாதித்து முடித்தது போல நாம் நினைப்போம். என் உழைப்பு, என் திறமையால் எனக்கு இந்த செல்வங்கள் கிடைத்தது, இந்த வாழ்வு கிடைத்தது, இந்த சந்தோஷம் கிடைத்தது என்று நினைப்போம்.

அப்படி அல்ல.

நமக்கு கிடைக்கும் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், வரும்போது அளவு கடந்த சந்தோஷம் வராது. போகும் போது நெஞ்சை அடைக்கும் துக்கம் வராது.

அவன் தந்தது, அவன் எடுத்துக் கொண்டான். இதில் என் வேலை என்ன என்ற சம நிலை வரும்.

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் உருகுவார்.

வேண்டத் தக்கது அறிவை நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே.


எனவே, பெருமாளே, எனக்கு கிடைத்தது எல்லாம் நீ பார்த்து தந்தது என்று நன்றியோடு நினைக்கிறார்.

செல்வம் , பதவி, இன்பம் வரும்போது அவனை நினையுங்கள். எல்லாம் அவன் தந்தது என்று நினையுங்கள்.

அப்படி நினைத்தால் என்ன நிகழும் ?

இறைவன் தந்தது என்று நினைத்தால் அது பிரசாதமாகி விடுகிறது. அதை பக்தியோடு பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியோடு அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும்.

அதில் குறை நிறை பார்க்கத் தோன்றாது. கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடையத் தோன்றும்.

மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்ற ஆசை தோன்றாது. ஒரு துளசி இலை கிடைத்தாலும் சந்தோஷம்தான். ஒரு மூட்டை துளசி இலை பிரசாதம் வேண்டும்  என்று மனம் நினைக்காது. ஒரு தேக்கரண்டி தீர்த்தம் கிடைத்தாலும்  சந்தோஷமாக பெற்றுக் கொள்ளத் தோன்றும். ஒரு அண்டா நிறைய தீர்த்தம் வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது.

கிடைத்தது எல்லாம் பிரசாதம் என்று நினையுங்கள். கிடைத்ததில் திருப்தி தோன்றும். பேராசை தோன்றாது. கிடைக்கவில்லை என்றால் துக்கம் வராது.

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், மனிதனுக்கு தேவைகள் இருக்கும் வரை, அவற்றை அடையும் ஆசை இருக்கும் வரை இறை நினைவு வராது.

இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும், பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் , ஊக்கத் தொகை (bonus ) வேண்டும், அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று மனிதன் உலக சுகங்களின் பின்னால் அலைந்து கொண்டே இருப்பான்.

அதற்கு ஒரு முடிவே இல்லை. இதில் இறை நினைப்பு எங்கே வரப்போகிறது ?

நம்மாழ்வார் சொல்கிறார்...உண்ணும் உணவு, மெல்லும் வெற்றிலை, (அடைக் காய்), அன்றாடம் செய்யும் வேலை, உடம்பில் பூசும் சந்தனம் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், அல்லும் பகலும் அனவரதமும் அவன் நினைப்பு இருக்கும். அது மட்டும் அல்ல, அப்படி நினைக்கும் போது மனம் தூய்மை ஆகிறது. "வெள்ளுயிர் ஆக்க வல்ல "

வெள்ளுயிர் என்றால் வெண்மையான உயிர். தூய்மையான உயிர்.

அவன் தந்தான், நான் பெற்றுக் கொண்டேன் என்று நினைப்பு வரும்போது மனம் தூய்மை அடைகிறது.

என் வாழ்வும் வசதியும் என் மேல் அதிகாரி எனக்குத் தந்தது இல்லை, என் சக ஊழியனிடம் இருந்து நான் தட்டிப் பறித்தது இல்லை, மற்றவனுக்கு கிடைக்க நான் தடையாய்...அவரவர்களுக்கு களுக்கு வேண்டியதை அவன் தருகிறான்.

யாருக்கு எவ்வளவு , எப்போது தரவேண்டுமோ அப்போது பங்கிட்டுக் கொடுக்கிறான்.

பகுத்து கொடுப்பதால் அவன் பகவன்.

அகர முதல் எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு.

என் மேலதிகாரி எனக்கு ஊதிய உயர்வு தருவானோ, மாட்டானோ ?

எனக்குத் தராமல் மற்றவர்களுக்குத் தந்து விடுவானோ ?

என்றெல்லாம் நமக்கு ஒரு பயமும், பதற்றமும் இருக்கும். இந்த பயத்தில், பதற்றத்தில் மேலதிகாரி சொல்வதெல்லாம் கேட்க வேண்டும், தேவை இல்லாமல் அவனைப் புகழ வேண்டும்...

இவர்கள் யார் எனக்குத் தருவதற்கு. பெருமாள் தருகிறார். நான் பெறுகிறேன். இடையில் இவர்கள் யார் என்ற நிமிர்வு வருகிற போது வாழ்க்கையில் பயமும், பதற்றமும் போய் மிதக்கும் மேகம் போல மனம் இலேசாகிப் போகிறது.


பாடல்

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

பொருள் 

நெய்யிடை =நெய் இடை இடையே இட்ட

நல்லதோர் சோறும் = நல்ல உணவும்

நியதமும் = தினமும்

அத்தாணிச் சேவகமும் = அத்தாணி என்றால் அரச மண்டபம். அரசவை. பெரிய வேலை என்று வைத்துக் கொள்ளலாம்.

கையடைக் காயும் = அடைக் காய் என்றால் பாக்கு. வெற்றிலை பாக்கும்.

கழுத்துக்குப்  பூணொடு = கழுத்தில் அணியும் சங்கிலியோடு

காதுக்குக் குண்டலமும் = காதில் அணியும் குண்டலமும்

மெய்யிட = மெய்யில் இட. உடம்பில் பூசிக் கொள்ள

நல்லதோர் சாந்தமும் = நல்ல மணமுள்ள சந்தனமும்

தந்து = தந்து

என்னை = என்னை

வெள்ளுயி ராக்கவல்ல = தூய்மையானவனாக ஆக்கும் வல்லமை படைத்த



பையுடை = படம் எடுத்து ஆடும் 

நாகப் = நாகப் பாம்புக்கு 

பகைக் = பகையான கருடனை 

கொடி யானுக்குப் = கொடியாகக் கொண்டவனுக்கு 

பல்லாண்டு கூறுவனே = பல்லாண்டு கூறுவேன் 

அவன் தராமல் வராது.

அவன் தடுக்காமல் நிற்காது.

வருவது வரட்டும் என்று இருங்கள். வாழ்கை இனிக்கும். 




1 comment:

  1. "இதெல்லாம் தந்து என்னை வெள்ளை உயிராக்கியுள்ளான்" என்பது ஆச்சரியமானது. நம் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எவ்வளவு செல்வங்கள் பெற்றாலும் இன்னும் வெள்ளை உயிராகவில்லையே! அதுதான் நம் அரசியல்வாதிக்கியளுக்கும், ஆழ்வாருக்கும் வித்தியாசம்!

    ReplyDelete